பணத்தாசையில் செய்த செயலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரை விட்ட பரிதாபம்
சேலம்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கொள்ளையடித்ததால் அவரது குடும்பமே உயிரை விட்ட பரிதாபம் நடந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் மிளகு வியாபாரி முகமது அலி. அவர் தனது கார் டிரைவர் வீராசாமி, கிளீனர் நஞ்சன் ஆகியோரிடம் ரூ. 24 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்து சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சென்று மிளகு வாங்கி வருமாறு அனுப்பினார்.

ஏற்காடு வந்த அவர்களை தாக்கி மிளகு தரகர் சண்முகம், ஏற்காடு விடுதி மேலாளர் பாஸ்கர் மற்றும் சிலர் கடந்த 12ம் தேதி பணத்தை கொள்ளையடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சண்முகம், பாஸ்கர் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம் கணவாய்க்காடைச் சேர்ந்த தங்கவேல் மகன் இளையராஜா(32)வுக்கு தொடர்பு உள்ளது. அவர் கொள்ளையடித்த பணத்தில் ரூ.9 லட்சத்தை வீட்டில் மறைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் போலீசார் இளையராஜாவின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.9 லட்சத்தை மீட்டனர். தனது கணவர் ஒரு கொள்ளையர் என்பதை அறிந்த அவரின் மனைவி யசோதா(27) தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.
இதையடுத்து அவர்களின் மகள்கள் கீ்ர்த்திகா(4), கோபிகா(2) ஆகியோர் தாத்தா-பாட்டி பொறுப்பில் இருந்தனர். இந்நிலையில் மனைவியின் பிரிவால் வாடிய இளையராஜா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பணத்திற்கு ஆசைப்பட்டு வழிப்பறி செய்ததால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications