ஒரே மகனின் பிரிவை தாங்க முடியாமல் தாய், பாட்டி தற்கொலை: மருத்துவமனையில் தந்தை
திருப்பூர்: மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்தனர். இதில் 2 பேர் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மூலனூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பாளையம் செட்டிதோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(45). விவசாய பண்ணை வைத்துள்ளார். அவரது மனைவி செல்வநாயகி(41). அவர்களின் ஒரே மகன் பன்னீர்செல்வம்(19). கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி விபத்தில் சிக்கி பலியானார்.
பெற்ற ஒரே மகன் பலியானதில் இருந்து முருகேசனும், அவரது மனைவியும் சோகத்திலேயே இருந்தனர். இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிறது. மகன் இறந்த சோகத்தில் இருந்த அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
நேற்று அதிகாலை வேளையில் பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளனர். அவர்களோடு சேர்ந்து பன்னீர்செல்வத்தின் பாட்டி முத்தம்மாளும்(68) விஷம் அருந்தினார். காலையில் தோட்டத்தில் வேலை பார்க்க வந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் பார்த்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.
தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செல்வநாயகியும், முத்தம்மாளும் பலியாகினர்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.