பார்வையற்ற சிறுவன் மர்மசாவு... தாயே மகனை கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம்.. சென்னையில் பயங்கரம்
ஆலந்தூர்: சென்னை பரங்கிமலை அருகே பார்வையற்ற மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் பத்மாவை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை நசரத்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (37). இவரது மனைவி பத்மா (35). இவர்களுக்கு பரத் (13) என்ற பார்வையற்ற மகன் இருந்தார்.
இவர் பார்வையற்றோர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். கருத்து வேறு காரணமாக கோபிநாத்தும் பத்மாவும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வாழ்கின்றனர். சிறுவன் பரத் மட்டும் பத்மாவின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இறப்பு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு தூங்கிய பரத் மறுநாள் எழவே இல்லை என்று கூறி பரங்கிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பத்மா அழைத்து சென்றார். அங்கு பரத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
தாய் பத்மாவிடம் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் பரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரத்தின் சாவில் மர்மம் இருப்பதாக போலீஸாருக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து பத்மாவிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
மன உளைச்சல்
அப்போது பரத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதுகுறித்து போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரத்துடன் தனியாக வசித்து வந்தேன். இதனால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது.
தற்கொலைக்கு முயற்சி தோல்வி அடைந்தது
எனவே மகனை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன். இதற்காக பரத்தின் கழுத்தை பிளாஸ்டிக் கவர் போட்டு நெரித்தேன். அவன் மயங்கிவிட்டான்.
மறைத்துவிட்டேன்
பின்னர் நானும் இதை போல் செய்தேன். ஆனால் எனக்கு எதுவும் ஆகவில்லை. இதனால் பரத்தை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு அவன் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இந்த உண்மையை கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மறைத்துவிட்டேன் என்று பத்மா வாக்குமூலம் அளித்தார்.