கூண்டு வைத்தும் சிக்காத சிறுத்தை: வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்
நெல்லை அருகே சுற்றித்திரியும் சிறுத்தை கூண்டில் சிக்காததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
நெல்லை: நெல்லை அருகே கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்காததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆடுகளை கடித்துக் குதறும் சிறுத்தையால் மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கடனா அணை பகுதி உள்ளது. அந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சுமார் ஒராண்டுக்கும் மேலாக காட்டு விலங்குகள் கிராம பகுதியில் புகுந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் கூண்டடு வைத்து இதுவரை 5 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டன.
இரவில் வலம் வரும் சிறுத்தை
ஆனால் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது குறைந்தபாடில்லை. இந்நிலையில் பெத்தன்விளை பகுதியை சேர்ந்த இசக்கி என்பவர் ஆட்டு பண்ணை வைத்திருக்கிறார். நள்ளிரவில் ஆடுகள் கத்துவதை கேட்ட அவர் வெளியே வந்து பார்த்தார்.
ஆட்டைக் கடித்து குதறும் சிறுத்தை
அங்கு சிறுத்தை ஆட்டை கடித்து குதறிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ந்த அவர் டார்ச் லைட்டை சிறுத்தை முகத்தில் அடித்ததால் மிரண்ட சிறுத்தை காட்டுக்குள் ஓட்டம் பிடித்தது.
6அடி சுவரை தாண்டும் சிறுத்தை
காட்டு விலங்குகள் அட்டகாசம் இருப்பதால் இவர் தனது வீட்டு சுற்று சுவர் சுமார் 6 அடி உயரம் வரை கட்டியுள்ளார். உள்ளே தான் பண்ணை உள்ளது. அப்படி இருந்தும் சிறுத்தை எவ்வித சிரமும் இல்லாமல் தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்கு காட்டும் சிறுத்தை - மக்கள் அச்சம்
தொடர்ந்து சிறுத்தை ஊருக்குள் வருவதால் வனத்துறையினர் அதனை பிடிக்க கூண்டு வைத்தனர். ஆனால் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருவதால் பொதுமக்கள் ஆள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.