பாஜக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்.. அண்ணாமலை பாதயாத்திரையின்போது திருப்பத்தூரில் அதிர்ச்சி!
திருப்பத்தூர்: அண்ணாமலை பாதயாத்திரையை ஒட்டி, அவரை வரவேற்பதற்காக பாஜகவினர் வைத்திருந்த கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில், 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொள்கிறார். திருப்பத்தூருக்கு அண்ணாமலை வருகை தருவதை ஒட்டி, பாஜகவினர், திருப்பத்தூர் நகர் முழுக்க இரும்பு கொடிக் கம்பங்கள் நட்டு, பேனர்களை அமைத்திருந்தனர்.

அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்திற்காக பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் திருப்பத்தூர் - புதுப்பேட்டை கூட்டுச் சாலையில் திரண்டிருந்த நிலையில், பாஜக கொடி கம்பம் விழுந்தது. சுமார் அடி 50 உயர இரும்புக் கொடிக்கம்பம் சாய்ந்தது. இதில், புதுப்பேட்டையைச் சேர்ந்த கலீல் என்பவர் தலையில் கொடிக் கம்பம் விழுந்ததில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலீலுக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை வருகையை ஒட்டி திருப்பத்தூரில் பாஜகவினர் அனுமதியின்றி ஏராளமான இடங்களில் ராட்சத கொடிக் கம்பங்களை அமைத்ததாகவும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பம் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications