குடும்ப பிரச்சனையால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த தந்தை
கிருஷ்ணகிரியில் குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

கிருஷ்ணகிரி: மகன்களுடன் ஏற்பட்ட தகராறால் விரக்தி அடைந்த தந்தை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த கவுண்டப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (45). இவருக்கு ரஞ்சிதா(40) என்ற மனைவியும் லெனில்(22), விமல்(20) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சண்முகத்துக்கும் அவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுவந்துள்ளன. இதைத் தொடர்ந்து ரஞ்சிதா கணவர் குறித்து மகன்களிடம் புகார் கூறிவந்துள்ளார். இதனால், இரண்டு மகன்களும் தந்தை சண்முகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறி மகன்கள் லெனில், விமல் இருவரும் தந்தை சண்முகத்தை தாக்கியுள்ளனர். மகன்கள் தாக்கியதால் மனமுடைந்த சண்முகம் வீட்டைவிட்டு வெளியேறி நேற்று வியாழக்கிழமை இரவு சாலூரில் உள்ள தனது நண்பர் ராஜா விட்டில் தங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து சண்முகத்தைக் காணவில்லை என்பதை அறிந்த ராஜா அருகில் உள்ள இடங்களில் தேடியுள்ளார். தந்தை சண்முகம் காணவில்லை என்பது குறித்து தகவல் அறிந்த மகன்களும் தேடியுள்ளனர். அப்போது குன்னத்தூர் ரயில் நிலையம் அருகே சண்முகம் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அங்கே சிதைந்து கிடந்த தந்தையின் உடலைக் கண்ட மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். தந்தையின் சிதறிய உடல்களை ஒரு பையில் மூட்டை கட்டி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
மகன்களுடன் ஏற்பட்ட தகராறால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக உடல் இருந்த இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications