இந்த வலியில் இருந்து மீண்டு வருவது பெரும் சவால்... சென்னை சில்க்ஸின் உருக்கமான கடிதம்!
இந்த வலியில் இருந்து மீண்டுவருவது பெரும் சவால் என தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை: தீச்சுவாலைகளின் கோரப் பசிக்கு இரையான தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வலியில் இருந்து மீண்டு வருவது பெரும் சவால் என சென்னை சில்க்ஸ் நிர்வாகத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள மெஸேஜ் வைரலாகியுள்ளது.
சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் இயங்கி வந்த தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2 நாட்களாக நீடித்த தீயை 400க்கும் மேற்பட்ட வீரர்கள் நேற்றிரவு போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்நிலையில் தீ விபத்தில் சேதமடைந்த அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சம்பளம் வழங்கிய நிறுவனம்
இந்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதியான நேற்று வழக்கம் போல் அனைத்து 1300 ஊழியர்களுக்கும் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் சம்பளம் வழங்கியது. மேலும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான 16 கிளைகளில் ஊழியர்களை பிரித்து பணியமர்த்தினர்.
வைரலான மெஸேஜ்
பெரும் இழப்பிலும் சோகத்திலும் சென்னை சில்க்ஸ் நிர்வாகம் மேற்கொண்ட இந்தப் பணிகள் மக்களிடையேயும் வாடிக்கையாளர்களிடையும் நிர்வாகத்தின் நன்மதிப்பை உயர்த்தியது. இந்நிலையில் சென்னை சில்க்ஸ் நிர்வனத்தின் செயல் இயக்குநர் கண்ணபிரான் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் ஒரு மெஸேஜ் வைரலாகியுள்ளது.
|
பெரும் சவால்
அதில் கூறியிருப்பதாவது, டியர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றுட ஊழியர்கள், உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் இந்த நேரத்திலான பிராத்தனைக்கும் நன்றி. இந்த வலியில் இருந்து வெளியே வருவது ஊழியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் பெரும் சவால்.
பீனிக்ஸ் பறவையை போல்..
ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன் தி சென்னை சில்க்ஸ் குழுமம் பல சவால்களை சந்தித்து தான் பெரும் சாதனைகளை நிகழ்த்தி இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. அதேபோல் இந்த துயரத்தில் இருந்து ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல் இதே தி நகரில் விரைவில் மீண்டெழும்.
தீயாக பரவும் மெஸேஜ்
இவ்வாறு அந்தக் மெஸேஜில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மெசேஜ் தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.