திருச்சியில் அனாதையாய் வீசப்பட்ட குழந்தை – மீட்டு அபயம் தந்த போலீஸ்
திருச்சி: திருச்சியில் அனாதையாக வீசப்பட்ட குழந்தை போலீசாரல் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார்புரம் ரவுண்டானா அருகே அண்ணா ஸ்டேடியம் செல்லும் ரோட்டில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அடுத்த கல்லூரி அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பில் 25 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். முதல் தளத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் குணா என்பவரது வீடு உள்ளது.
இன்று காலை 7.30 மணிக்கு குணாவின் வீட்டு வாசல் முன்பு ஒரு அழகான ஆண் குழந்தை அழுதவாறு கிடந்தது. இதை பார்த்த மற்ற குடியிருப்புவாசிகள் யாராவது குழந்தையை வைத்து விட்டு சென்றிருக்கலாம் என நினைத்து அக்கம்பக்கத்தில் விசாரித்தனர்.
ஆனால் குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. குழந்தையின் தாய் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அந்த குழந்தை பிறந்து சில நாட்களே ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது. தொப்புள் கொடியில் துணி சுற்றப்பட்டு இருந்தது.
இந்த ஆண் குழந்தை அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்கு வந்தது எப்படி என்பதும், குழந்தையின் தாய் எதற்காக குடியிருப்பு வீட்டு வாசலில் கொண்டு வந்து போட்டு சென்றார் என்பது மர்மமாக உள்ளது.
குழந்தை கிடந்த அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டு உரிமையாளர் குணா நேற்று இரவு வெளியூர் சென்றிருந்த நிலையில் குழந்தையை மர்ம பெண் போட்டு விட்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குழந்தையை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அவசர போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கே.கே நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர்.
உடனடியாக அந்த குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தை காப்பகம் திட்டத்தில் சேர்த்தனர்.
அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு மருத்துவமனை நர்சுகள் போட்டி போட்டுக்கொண்டு அந்த குழந்தையை கவனித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் இந்த தாயின் கொடுமையான செயலுக்கு பின்னணியில் யாரோ மர்ம நபர் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குழந்தையின் தாயை கண்டுபிடித்தால்தான் அதுபற்றிய முழு விபரம் தெரியவரும்.
குழந்தையின் தாய் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் அப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு யாருக்காவது ஆண் குழந்தை பிறந்ததா என்றும், பெண்கள் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சியில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை அடுக்குமாடி குடியிருப்பில் அனாதையாக வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications