பாஜக கூட்டணி யூகிக்கவே முடியாத வெற்றி பெறும் என்கிறார் வைகோ
பாஜக கூட்டணியில் கட்சிகள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். இந்த கூட்டணி யாரும் தமிழகத்தில் யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு வெற்றி பெறும்" என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
மதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நேற்று நடைபெற்றது.
தேமுதிக எம்எல்ஏ ஏ.கே.டி ராஜா தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசும்போது,கூறியதாவது:

தமிழருவி மணியன் முயற்சி
"பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை முறைப்படி அறிவிப்பார். தமிழகத்தில் இந்தக் கூட்டணி அமைவதற்காக தமிழருவி மணியன் ஒரு துறவியைப் போல பாடுபட்டுள்ளார்.

மக்களை மீட்கும் தேர்தல்
1972-ல் இருந்து அதிமுக, திமுக என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஒரு கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டால் மற்றொரு கட்சியை பிடிக்காவிட்டாலும், வேறு வழியின்றி தேர்வு செய்யும் சூழ்நிலை இருந்து வருகிறது.

மாற்றம் ஏற்படும்
இப்படி ஒரு நிலையிலிருந்து மக்களை மீட்கும் தேர்தல்தான் இது.திமுக, அதிமுகவிலிருந்து விடுபட்டு, மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக அமையும்

தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு
விடுதலைப்புலிகளின் கடற்படையை இந்திய அரசுதான் அழித்ததாக யஷ்வந்த் சின்ஹாவே கூறியுள்ளார். எனவே நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கும் விடிவு கிடைக்கும்.

எங்கிருந்தாலும் புலி உருமும்
நான் கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை. எந்த கூண்டில் இருந்தாலும் புலி உறுமும். மாகாணங்களுக்கு உரிமை, மதச்சார்பின்மை, சமூகநீதி, வாஜ்பாய் முடிவின்படி இலங்கை எதிரான போக்கு போன்றவற்றில் மோடி அரசு சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

கூட்டணியில் ஒற்றுமை
எனக்கு அதிகார கனவு கிடையாது. மதிமுக நடத்தும் முதல் செயல்வீரர் கூட்டத்துக்கு தலைமை வகிப்பது தேமுதிக. அந்தளவுக்கு ஒற்றுமையுடன் உள்ளோம். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. இந்த கூட்டணி யாரும் தமிழகத்தில் யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு வெற்றி பெறும்" என்றார் வைகோ.

செயல்வீரர்கள் பங்கேற்பு
இக்கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன், பாமக மாவட்டச் செயலாளர் வீரக்குமார், மக்கள் தமிழகம் கட்சி நிறுவனர் புரட்சிக்கவிதாசன், காந்திய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications