அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது!
சென்னை: அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்ற நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி படம் அகற்றப்பட்டிருந்தது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து கலைஞர் படம் மீண்டும் வைக்கப்பட்டிருக்கிறது.
திமுக எதிர்ப்பை மையப்படுத்திதான் தவெக பிரச்சாரம் செய்து தற்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறது. இருப்பினும் கலைஞர் கருணாநிதியின் படம் அகற்றப்பட்டிருந்தது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

என்ன நடந்தது?
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் படங்களுடன் கலைஞர் கருணாநிதியின் புகைப்படமும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் ராஜ்மோகன் வருகைக்கு முன்னதாக, கலைஞர் கருணாநிதியின் படம் மட்டும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக கவிஞர் வைரமுத்து, "
ஒரு சமூகத்தின்
மாறாத தேசிய குணம்
மறதி
சூரியனை மறந்துவிடும்
வானத்தைப் போல
சொற்களை மறந்துவிடும்
மொழியைப் போல
உன்னையும் மறக்கிறதய்யா
சின்னதொரு கூட்டம்"
என எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், செய்தியாளர்களை சந்திக்கையில், "இந்தச் செய்தி என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தேவநேயப் பாவாணர் நூலகத்தில் இலக்கிய விழா நடைபெற்றபோது, அமைச்சர் ராஜ்மோகன் வருகிறார் என்றதும் கலைஞர் படம் அகற்றப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தலைவரின் படம் மட்டும் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன? இந்த அரசு கலைஞர் கருணாநிதிக்கு எதிரானதா?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இலக்கியவாதிகள் தொடர்ச்சியாக இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், அகற்றப்பட படம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications