கொத்துக் கொத்தாய் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள்- தடுக்க கோரி கோவை ஆட்சியரிடம் மனு
கோவை: கோவை மாவட்டத்தில் அடிக்கடி நடந்துவரும் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்கொலையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா என்ற மாணவர் அமைப்பு சார்பில் ஆட்சியரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தெற்கு மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது, செயலர் பைசல் உள்ளிட்டோர் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கிடம் அளித்த மனுவில், "கோவை மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், மாணவர் இடையிலான புரிந்துணர்வு இல்லாததால் மாணவர்கள் மிகுந்த மன நெருக்கடிக்குள்ளாகின்றனர்.
இதனால் தான் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாமல் மாணவர்கள் திடீரென தற்கொலை முடிவை நாடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவைப்புதூரைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி, ஆசிரியை அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதுடன், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.