மது போதையில் பொதுமக்களிடம் தகராறு... தர்மபுரி போலீஸ்காரர் கைது
தர்மபுரி: மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்ததற்காக காவல் நிலைய தலைமைக் காவலர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (38), காரிமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலராக உள்ளார். இவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இல்லத்தில் சமையல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளி இரவு மது போதையில் இருந்த சரவணன், பென்னாகரம் கடைவீதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த பொதுமக்களை வழிமறித்து வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அப்பகுதியில் செல்பேசி கடை நடத்தி வரும் சங்கர் கணேஷ் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் சரவணன்.
அதற்குள் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பென்னாகரம் போலீஸார், சரவணனைக் கைது செய்தனர். அவர் மீது மதுபோதையில் பொதுமக்களை மிரட்டியது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.