வினோத் ராய் மூலமான பாஜக சதியை உணராமல் பலிகடாவாக்கிய மன்மோகன்சிங்... புயலை கிளப்பும் ஆ.ராசா புத்தகம்!
2ஜி விவகாரத்தில் பாஜகவின் சதியை உணராமல் மன்மோகன்சிங் தம்மை பலிகடாவாக்கினார் என ஆ.ராசா தமது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
சென்னை: 2ஜி விவகாரத்தில் வினோத் ராய் மூலமான பாஜக தீட்டிய சதியை உணராமல் தம்மை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் பலிகடாவாக்கிவிட்டார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தமது புதிய புத்தகத்தில் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அமைச்சராக இருந்த ஆ.ராசா கடைபிடித்த கொள்கையால் தேசத்துக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் என கொளுத்திப் போட்டார் தலைமை கணக்கு தணிக்கையாளராக இருந்த வினோத் ராய். இது நாட்டில் மிகப் பெரும் அரசியல் ஆழிப்பேரலையையே ஏற்படுத்தியது.
[அரசின் இமேஜை காப்பாற்ற என்னை சிறையில் தள்ளினர்.. 2ஜி பற்றிய ஆ.ராசா புத்தகத்தில் சாட்டையடி]
இது தொடர்பான வழக்கில் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் சிறைவாசம் அனுபவித்தனர். ஆனால் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே நிரபராதிகள் என அண்மையில் விடுவித்தது.
2ஜி வழக்கில் என்ன நடந்தது என்பதை 15 மாதங்கள் சிறையில் இருந்த போது ஆ. ராசா புத்தகமாக எழுதினார். "2G Saga Unfolds" என்கிற தலைப்பிலான இப்புத்தகம் வரும் 20-ந் தேதி வெளியிடப்படுகிறது.

சதியில் சிக்கிய மன்மோகன்
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: வினோத் ராய் எனும் பாஜகவின் ஏஜெண்ட்டை பயன்படுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது. இந்த சதியை உணராத அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தம்மை பலிகடாவாக்கிவிட்டார்.

சட்டப்படி சரி
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைக்கு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருந்தார். உங்களது ஒவ்வொரு செயலுமே சட்டப்படி சரியானதுதான் எனக் கூறினார் மன்மோகன்சிங்.

மன்மோகன் அமைதி
இந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மவுனமும் மன்மோகன்சிங் எந்த ஒரு விளக்கமுமே தராமல் முழு அமைதி காத்ததும் இந்த தேசத்தின் மனசாட்சியை முடக்கி வைத்துவிட்டது. அப்போதைய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத்ராயின் தோளில் வைக்கப்பட்ட துப்பாக்கியின் இலக்காக நான் இருந்தேன்.

பொய்யான அறிக்கை
வினோத் ராய் கொடுத்த ரூ1.76 லட்சம் கோடி ஊழல் எனும் அறிக்கையால் தேசத்தின் கணக்குத் தணிக்கை துறை மீதான நம்பிக்கையே பறிபோய்விட்டது. அவரால்தான் நாட்டின் குக்கிராமங்களில் கூட ரூ1.76 லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டோம் என அப்போதே வதந்தி பரவியது. அவரால்தான் நமது தேசம் உலக நாடுகளிடையே ஊழல் தேசமாக அவமானப்பட்டது.

தேசத்துக்கு இழப்பு
வினோத் ராயின் பொய்யான அறிக்கையால் இந்திய அரசு வெளிநாடுகளில் போட்டிருந்த ஒப்பந்தங்கள் மீதான நம்பகத்தன்மை பறிபோயின. இதனால் இந்தியாவுக்கான முதலீடுகள் முடங்கின. இப்படி தேசத்துக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியவர் உண்மையில் வினோத் ராய்தான்.

ஊழலில் இருந்து தப்பிக்க
அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தது. அந்த அரசில் இருந்த சட்டவல்லுநர்கள் யாரும் எனக்கு ஆதரவாக உண்மையை கூற துணிந்து முன்வரவில்லை. இதற்கு மாறாக என்னை பலிகடவாக்கி சிறைக்கு அனுப்பி வைத்தார்கள் என்பதுதான் நிதர்சனம்.

மன்மோகன் லாபிகளுக்கு ஆதரவு
2ஜி வழக்குகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாகப் பிரித்தது என்பதே அந்த அரசைப் பாதுகாக்கின்ற ஒரு கேடயமாகவும் எனக்கு எதிராக சிபிஐக்கான கூர்மையான வாளாகவும்தான் இருந்தது. தொலைத் தொடர்புத்துறையில் கோலோச்சி வந்த லாபிகளுக்கு எதிராக நான் போராடினேன். ஆனால் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கோ, அந்த லாபிகளுக்கு ஆதரவாளராக இருந்தார்.
இவ்வாறு பல விவகாரங்களைப் போட்டுடைத்துள்ளார் ஆ. ராசா.












Click it and Unblock the Notifications