ஓ காட்.. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி... மாமியார் முகத்தில் மருமகள் முழிக்கக் கூடாதாம்!
சென்னை: ஆடி அமாவாசை, குரு பெயர்ச்சி, ஆடி பதினெட்டு ஆகிய மூன்று பண்டிகைகளும் ஒரு சேர வந்துள்ளதால் மாமியார் முகத்தில் மருமகள் முழிக்கக் கூடாது எனவும் ஒரே வீட்டில் இன்றைய தினம் இருவரும் இருக்கக் கூடாது எனவும் வதந்தி பரவியதால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நம் ஊரில் வதந்திகளுக்கு பஞ்சமே இருந்ததில்லை. தங்கைகளுக்கு அண்ணன்கள் பச்சை சீலை எடுத்து தரவேண்டும் என்ற வதந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு பரவியது.

சமீபத்தில் பிரபல கோவில்களில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி இறங்கியதாக பரவிய வதந்தியால், கணவருக்கு ஆகாது என்று அச்சப்பட்ட பெண்கள் தங்களின் வீட்டு வாசல்களில் விளக்கேற்றி பரிகாரம் செய்தனர்.
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருப்பெயர்ச்சயை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
ஆடிப்பெருக்கை கொண்டாட வந்த புதுமணத் தம்பதிகளும், ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களும், குரு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரப் பூஜை செய்ய வந்தவர்களும் என நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபட்டனர்.
இந்த நிலையில், பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஏராளமான பெண்கள் திரண்டுள்ளனர். இவர்கள் திங்கட்கிழமை இரவு 12 மணி முதலே கோயிலில் தங்கியுள்ளனர். இதற்குக் காரணம் ஒரு வதந்தி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி, ஆடி பதினெட்டு இவை மூன்றும் ஒரு சேர வந்துள்ளதால் மாமியார் முகத்தில் மருமகள் முழிக்கக் கூடாது எனவும் ஒரே வீட்டில் இன்றைய தினம் இருவரும் இருக்கக் கூடாது எனவும் வதந்தி பரவவே, பண்ருட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் இரவு 12 மணி முதல் முகாமிட்டனர்.
மேல்மருவத்தூர், மேல்மலையனூர் உள்ளிட்ட பல கோயில்களுக்கும் பெண்கள் படையெடுத்தனர். நள்ளிரவு 12 மணி வரை கோயில்களிலேயே தங்கியிருந்து, நாளை விடியற்காலையில் வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
பச்சை புடவை, மஞ்சள் புடவை, சிவப்பு புடவை என்று வதந்தி கிளப்பியவர்கள் இப்போது மாமியார் முகத்தில் மருமகள் விழிக்கக் கூடாது என்று புரளி கிளப்பி விட்டுள்ளனர். இந்த புரளியைக் கிளப்பியது யார் என்பதும், எப்படி பரவியது என்பதுதான் புரியாத புரியாக உள்ளது.












Click it and Unblock the Notifications