திருவள்ளூரில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்... எப்போது ஒழியும் இந்த அவலங்கள்!
திருவள்ளூரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் : அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உத்தரவால் மாணவிகள் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
திருவள்ளூரில் செயல்பட்டு வருகிறது ஆர். எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியின் தலைமைஆசிரியர் கடந்த 24ம் தேதி மாணவிகளை அழைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு மாணவிகள் தயக்கம் காட்டவே கழிவறையை சுத்தம் செய்யாவிட்டால் பள்ளியில் படிக்க முடியாது என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பள்ளிப்படிப்பு தடை பட்டுவிடுமோ என்று பயந்த மாணவிகள் அழுதபடியே கழிவறையை சுத்தம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்
மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன. அதில் எந்த பாதுகாப்பு உபகரணங்களோ, கையுறையோ இல்லாமல் வெறும் கைகளால் மாணவிகள் பிரஷ் பிடித்து சுத்தம் செய்கின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்தாலே கடும் கோபம் எழுகிறது.
சோகத்தில் உறைந்த மாணவிகள்
கழிவறையை சுத்தம் செய்ததையடுத்து மாணவிகள் கடந்த 2 நாட்களாக யாருடனும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் மாணவிகள் சோகமாக இருப்பது குறித்து பெற்றோர் விடாமல் கேட்ட போது தான் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ததை மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் கொந்தளிப்பு
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலையிடம் மாணவிகளின் பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு முறையான பதில் அளிக்காமல் அவர்களை திட்டி வெளியேற்றியுள்ளார் தலைமை ஆசிரியர். தலைமை ஆசிரியரின் இந்த செயல் பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி அதிகாரி விசாரணை
இதனிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு முதன்மை கல்வி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். கல்வி அலுவலர் ராஜேந்திரன் பள்ளியில் ஆய்வு செய்ததோடு இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
ஏன் இந்த அவலங்கள்?
ஒருபுறம் கிராமப்புற மாணவிகளின் கல்வித்தரம் உயர வேண்டும் என்று குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் இதே சமூகத்தில் தான் இது போன்ற கொடுமைகளும் நடக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கப்படும் இந்த அவலங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வருவது எப்போது?
(இந்த சம்பவம் நடந்தது திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு பள்ளி. நமது செய்தியில் தவறுதலாக ஸ்ரீஆர்எம்ஜெயின் வித்யாஸ்ரமம் சிபிஎஸ்இ பள்ளியின் புகைப்படம் இடம் பெற்று விட்டது.)