ஜெ. சமாதியில் ஓபிஎஸ் தியானம் செய்யலாம்- நாங்க செய்யக் கூடாதா?- போலீசிடம் மாணவி சுளீர் கேள்வி
ஜெயலலிதா சமாதியீல் ஓ.பன்னீர் செல்வம் தியானம் செய்யலாம். நாங்கள் செய்யக் கூடாதா என்று மாணவி ஒருவர் போலீஸாரிடம் ஆவேசமாக கேட்டார்.
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தியபோது "இங்கு ஓபிஎஸ் தியானம் செய்யலாம். நாங்கள் செய்யக் கூடாதா" என்று மாணவி ஒருவர் கேள்வி எழுப்பி அதிரவைத்தார்.
நீட் தேர்வால் மருத்துவம் படிக்க வேண்டும் என கனவு கலைந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் தமிழகம், புதுவையில் போராட்டங்கள் வெடித்தன. ஏற்கெனவே மத்திய அரசின் திட்டங்களை கண்மூடி கொண்டு மாநில அரசு செயல்படுத்துவதாக பொதுமக்களும் , இளைஞர்களும் கொதிப்பில் இருந்தனர்.
5-ஆவது நாளாக போராட்டம்
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மாணவர்கள் தமிழகம், புதுவையில் 5-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே போராட்டம் வெடித்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
ஜெ. சமாதியில் போராட்டம்
இந்நிலையில் ஜெயலலிதா சமாதிக்கு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றனர். அங்கு சமாதி அருகே சென்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
போலீஸார் பேச்சு
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் சமாதியிலிருந்து மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து அப்புறப்படுத்த முயன்ற போலீஸாரிடம் மாணவி ஒருவர் சுளீர் கேள்வியை எழுப்பினார்.
மாணவி விளாசல்
ஜெயலலிதா சமாதியில் "ஓபிஎஸ் தியானம் செய்வதை போல் நாங்கள் செய்கிறோம் என்று கண்ணை மூடி கொண்டு மாணவி ஒருவர் அமர்ந்தார். இதற்கு போலீஸார் இங்கெல்லாம் தியானம் செய்ய கூடாது என்றனர். அதற்கு அந்த மாணவி ஓபிஎஸ் தியானம் செய்யும் போது நாங்கள் ஏன் சார் செய்யக் கூடாது என கேட்டு அதிரவைத்தார்.