10ம் வகுப்பு பாஸ் ஆகாமலே பிளஸ் 2 படித்த மாணவர்.. உடனே வெளியேற்றம்... கல்வி அதிகாரிகள் விசாரணை
சிவகங்கை: சிவகங்கை அருகே ஆசிரியர்களின் கவனக்குறைவால் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே 12ம் வகுப்பு வரை மாணவர் படித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அரசுப்பள்ளியில் இருந்து மாணவனை தலைமை ஆசிரியர் கடிதம் வாங்கிவிட்டு வெளியேற்றினார். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை அருகே வி.மலம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மாணவர் ஒருவர் கடந்த 2022-ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ளார். அதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் தோ்ச்சி பெறவில்லை. இதை தொடர்ந்து அவர் உடனடியாக ஆகஸ்டு மாதம் மறுதேர்வு எழுதினார். இதில் கணிதம், சமூக அறிவியல் ஆகிய 2 பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்ணும், எழுத்து தேர்வில் 15 மதிப்பெண் மட்டுமே பெற்றார். அவர் மொத்தம் இதில் 40 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், எழுத்து தேர்வில் 20 மதிப்பெண்கள் பெறவில்லை என்பதால் அவர் அந்த பாடத்தில் தோல்வி அடைந்தவர் ஆவார். அவர் மீண்டும் மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே 11ம் வகுப்பில் சேர முடியும்.
இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவனோ தான் அறிவியலில் 40 மார்க் எடுத்துவிட்டதால் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்து பிளஸ் 1 சேர விண்ணப்பித்தான். அந்த சமயத்தில் சான்றிதழ்களை ஆசிரியர்கள் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டதால் 11ம் வகுப்பு சேர்ந்துவிட்டான். அறிவியலில் தேர்ச்சி பெறாத மாணவனை பிளஸ்-1 வகுப்பில் ஆசிரியர்கள் சேர்த்துக்கொண்டனர்.
அந்த மாணவன் தற்போது பிளஸ்-1 தேர்ச்சி பெற்று பிளஸ்-2 படித்து வந்திருக்கிறான். இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்வு வர உள்ளதால் மாணவர்களின் சான்றிதழ்கள் பள்ளி மூலம் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருகின்றன. அங்கு மாணவனின் சான்றிதழை அதிகாரிகள் ஆய்வு செய்து 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்த நிலையில், பிளஸ்-2 படித்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பொதுத்தேர்வு எழுத அவரை அனுமதிக்க முடியாது என்று அறிவுறுத்தினர்.
அதன்பிறகுதான் நடந்த தவறு அந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அந்த மாணவனை பள்ளியில் இருந்து விடுவித்து மீண்டும் 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து அதன்பின்புதான் பிளஸ்-2 தேர்வு எழுத முடியும் எனக் கூறினார்கள்.
மேலும், மாணவனின் பெற்றோரை அழைத்து, பள்ளி தலைமை ஆசிரியர் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு மாணவனை பள்ளியில் இருந்தும் வெளியேற்றினார்கள். இதனிடையே 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவனை பள்ளியில் எப்படி சேர்த்தார்கள்? என்று சிவகங்கை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் நேரில் சென்று விசாரித்தனர். கவனக்குறைவால் நடந்த தவறு என்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications