ஓ சமூகமே.. கொலைகளை விடவும் உன் மெளனம் கொடூரமானது #ராஜலட்சுமி
- ஜோசப் ராஜா
இன்னும் எத்தனை உயிர்கள்
எரிந்து கருகிட வேண்டும்
இன்னும் எத்தனை உடல்கள்
வெட்டிச் சாய்க்கப்பட வேண்டும்
இன்னும் எத்தனை சிறுமிகள்
படுகொலைக்கு ஆளாக வேண்டும்
எல்லாவற்றையும் பார்ப்பது போல
தலையும் உடலும் துண்டாக்கப்பட்ட
அந்தப் பதிமூன்று வயதுச்சிறுமி
ராஜலட்சுமியைப் பாருங்கள்
எல்லாவற்றையும் பேசுவது போல
அந்தப் பச்சிளம் குழந்தையின்
படுகொலையைப் பற்றியும் பேசுங்கள்
சாதியின் பலிபீடத்தில்
ஆணாதிக்க அரிவாளால்
வெட்டிச் சாய்க்கப்பட்ட
அந்த அப்பாவிச் சிறுமியும்
இந்தியாவின் மகளல்லவா
ஓ சமூகமே
கொலைகளை விடவும்
உங்கள் மெளனம் கொடுமையானது
ஓ சமூகமே
கொலைகளை விடவும்
உங்கள் பாராமுகம் பயங்கரமானது
இந்தியாவின் பெருமையை
உலகுக்கே பறைசாற்றும்
உயரமான சிலையின் அடியில்
ஒருங்கிணைந்த இந்தியாவின்
ஓயாத சிறுமையாய்
துண்டாக்கப்பட்ட தலையில் இருந்தும்
துடிதுடித்த உடலில் இருந்தும்
வழிந்தோடிய ரத்தத்தை
பார்க்கவேயில்லையா நீங்கள்
பாதி தூக்கத்தில்
பதறிப்போய் எழநேர்ந்த
இந்த அதிகாலை
எத்தனை கொடூரமாக இருக்கிறது
அந்தச் சிறுமியின் கதறல்களாலும்
அந்தத் தாயின் மன்றாட்டுச் சத்தத்தாலும்
நிறைந்திருக்கிறது என்னுடைய வானம்
கழுகுகளைத் தவிர கழுகுகளைத் தவிர
எதுவுமேயில்லை என்னுடைய வானத்தில்
ஆனாலும் அந்த நீலவானத்தை
நிலையாகப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
ஆனாலும் இதற்கான நீதியைக்கூட
உங்களிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்