இந்தி மொழி திணிக்கப்பட்டால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்: சீமான் எச்சரிக்கை
சென்னை: மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட்டால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திசை திருப்பும் செயல்...
நன்மை பயக்கும் திட்டங்களை வரையறை செய்து நிறைவேற்ற திறனற்ற மோடி அரசு, மக்களை திசைதிருப்ப இந்திப் பிரச்சினையை எழுப்புகிறது.

மக்கள் ஆற்றல் வீணாகும்...
மக்களின் நலனிற்காக போராடும் அரசியல் சக்திகளின் ஆற்றலை திசை திருப்பி வீணடிக்கும் நோக்கம் கொண்டதாக இந்தித் திணிப்பு இருக்கிறது.

எதிர்மறை வேலை...
இந்த நாட்டின் வளங்களை பயன்படுத்தி, தொழில் உற்பத்தியை பெருக்கி, வேலை வாய்ப்புகளை பெருக்க வகையில்லாமல், சமஸ்கிருதம் வளர்ப்பு, இந்தி திணிப்பு என்று எதிர்மறை வேலைகளில் ஈடுபடுகிறது மோடி அரசு. பா.ஜனதா கட்சியினர் தமிழ்நாட்டை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

மீண்டும் மொழிப்போர்...
இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டங்களை கண்ட தமிழகம், இந்தி மொழி திணிக்கப்பட்டால், அதனை எதிர்த்து மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என்பதை மறந்து விடக்கூடாது' என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications