தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை.. கொலை செய்த பெண் தலைமறைவு
தூத்துக்குடியில் குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த பெண் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த பெண் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் அகமது ராஜா. செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்ததுள்ளது. இந்த தம்பதிக்கு பிறந்த 7 நாட்கள் ஆன ஆண் குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
கவிதாவுக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அகமது ராஜாவின் தாய் பாத்திமா பீவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருந்த அரிவாளால் பாத்திமா பீவி கவிதாவை சராமரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே கவிதா உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்பி மகேந்திரன், வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கவிதாவின் உறவினர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பாத்திமா பீவி வீட்டை அடித்து நொறுக்கினர். மேலும் அவரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று தெருவில் அமர்ந்தனர்.
இந்நிலையில் கவிதாவின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்தது. அதனை உள்ளே விடாமல் தடுத்தனர். இதையடுத்து அடுத்த தெரு சந்தில் ஆம்புலன்சை கொண்டு வந்து கவிதா உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதனால் பொது மக்கள் ஆம்புலன்சை துரத்தி தொடங்கியதால் போலீசார் லேசான தடியடி நடத்தை கூட்டத்தை கலைத்தனர். மேலும் தலைமறைவான பாத்திமா பீவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.