சென்னை: மகன்களைக் காப்பாற்ற முயன்ற பெண்ணை தீ வைத்துக் கொன்ற வாலிபர் கைது
சென்னை: தெருச் சண்டையில் மகன்களை காப்பாற்ற தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய பெண்ணை எரித்துக் கொன்ற வாலிபர் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
சென்னை, ஓட்டேரி, சாமிதாஸ் புரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி மோட்சா என்ற மேரி (56). இவரது மகன்கள் சார்லஸ், விவேக். மோட்சாவின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பெயிண்டர் தண்டபாணி.
கடந்த மாதம் 28-ந்தேதி குடிபோதையில் வந்த தண்டபாணி அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை சார்லசும், விவேக்கும் தட்டிக் கேட்டுள்ளனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, சார்லஸ், விவேக் இருவரும் சேர்ந்து தண்டபாணியைச் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தண்டபாணி தாக்கப்பட்ட தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்துப் பயந்து போன மோட்சா, கூட்டத்தினர் தனது மகன்களை ஏதேனும் செய்து விடுவார்களோ என அஞ்சி, தன் மகன்களைத் தாக்க முற்பட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.
இதற்காக உடல் முழுவதையும் மண்ணெண்ணெய் ஊற்றி நனைத்த மோட்சா கையில் தீப்பெட்டியுடன் சாலையின் நடுவே நின்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மோட்சா கையில் இருந்த தீப்பெட்டியை பறித்துள்ளனர்.
ஆனால், அப்போது குடிபோதையோடு அடி வாங்கிய ஆத்திரத்தில் இருந்த தண்டபாணி தன்னிடம் இருந்த தீப்பெட்டி மூலம் மோட்சாவைக் கொளுத்தியுள்ளார். இதனால் உடல் கருகிய மோட்சா உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு மோட்சா பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்சா உயிரிழந்ததைத் தொடர்ந்து தண்டபாணி மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப் பட்டது. தற்போது தண்டபாணி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications