உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் போல இருக்கிறது இன்றைய காதல்.. பரிதாபமாக பறிபோனது ஒரு உயிர்!
காதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்: வெங்காயம் போல இருக்கிறது இன்றைய பிஞ்சுகளின் காதல். உள்ளே பார்த்தால் ஒன்றையுமே காணோம். அதற்காக தற்கொலை செய்துகொள்ளும் செயல் அதைவிட அபாயகரமானதாக இருக்கிறது.
திண்டுக்கல் கன்னிவாடியை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணும் இவரை விரும்பினார். எனவே வீட்டுக்கு தெரியாமல் இருவரும் ஓடிவந்து கல்யாணம் செய்து கொண்டனர். அந்த பெண் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். எந்த ஊர் என்பதைவிட முக்கியம், அவர்களின் வயதுதான். ராஜகோபாலுக்கு வயது 19. பெண்ணுக்கு வயது 17. இருவரும் கல்யாணம் முடித்து திருப்பூர் வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் வந்து யாருக்கும் தெரியாமல் தங்கி குடும்பம் நடத்த தொடங்கினர்.
18 வயது முடியட்டும்
ஆனால் பெண்ணின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது. திருப்பூருக்கு வந்து இருவரையும் கையும்களவுமாக பிடித்துவிட்டனர். பிறகு ராஜகோபாலிடம், "மகளுக்கு இப்போதுதான் 17 வயது ஆகிறது. 18 வயது முடியட்டும். அதன்பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்" என்று சமாதானம் செய்தனர். அத்துடன் பெண்ணையும் கூடவே கூட்டிக் கொண்டு போய்விட்டனர். 18 வயது முடிந்தவுடன், அதாவது இன்னும் சில மாதங்களில் தன் காதல் மனைவி மீண்டும் வந்துவிடுவாள், அவளை எப்படியும் நன்றாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்து திருப்பூரிலேயே ஒரு வேலையில் போய் சேர்ந்தார் ராஜகோபால்.
ஏன் பேசவில்லை?
ஆனால் நாள் ஆக ஆக காதல் மனைவியிடமிருந்து போன் வருவது குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் ராஜகோபாலிடம் பேசுவதையே அந்த பெண் நிறுத்திவிட்டார். உயிருக்குயிராக விரும்பியவள் ஏன் பேசவில்லை, தன்னை வெறுத்துவிட்டாளா, அவளது பெற்றோர் மனசை மாத்திட்டாங்களா? என்று இப்படியே குழம்பி தவித்து வந்தார். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த ராஜகோபால், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலையே செய்து கொண்டார். தகவலறிந்து வந்த வீரபாண்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
பிஞ்சு காதல் இதுதான்
ராஜகோபால், உரிய வயதில் காதலித்து இருக்கலாம். அல்லது உரிய வயதில் திருமணம் செய்திருக்கலாம். அல்லது பிரிந்துபோன மனைவியை அழைக்க வேறு முறையில் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அல்லது இன்னும் சில காலம் பொறுத்திருந்து பார்த்திருக்கலாம். தேவையில்லாத செயல். தேவையில்லாத முடிவு. 17 வயது பெண்ணை 19 வயதுள்ளவர் அழைத்து வந்து எப்படி பராமரிக்க முடியும்? எப்படி சுயதேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? விலைமதிப்பற்ற உயிரை போக்கிக் கொள்ள ஒரு நியாயமான காரணம் வேண்டாமா? பிஞ்சு காதல் இப்படித்தான் போய் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது.
பக்குவப்பட்ட காதல் தேவை
காதல் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்தும், தெரிந்தும் கொள்ளாமல், அதில் விழுந்து, மூளை மழுங்கிப்போவதுடன், அவர்கள் சிக்கிக் கொள்வதோடு இல்லாமல் பெற்றவர்கள், உற்றவர்களின் உயிரையும் வாங்கி கொண்டு இருப்பது அதிகமாகி வருகிறது. முன்பெல்லாம் உடல், மனம், வயது பக்குவப்பட்டும்கூட பயந்து பயந்து காதலித்தார்கள். இப்போது, இதில் எதுவுமே முதிர்ச்சி பெறாமல் காதலில் விழுவதால்தான் இதுபோல துர்மரணங்கள் நடக்கின்றன.
துயரங்களை தவிருங்கள்
அதேபோல, வீட்டில் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை பாதுகாத்து, பராமரித்து, அரவணைக்க வேண்டும். ஒரு பெண் வீட்டை விட்டு ஓடிப்போகும் சூழலை அக்குடும்பம் ஏற்படுத்தக்கூடாது. அதுமட்டுமல்லாமல் தங்களது மகள் இன்னும் குழந்தைதான் என்ற எண்ணத்தை உடைத்தெறிய வேண்டும். 5 வயது ஆனாலும் 20 ஆனாலும் அந்த பெண் பெற்றவர்களுக்கு குழந்தைதான். ஆனால் இன்றைய நாட்டு நடப்பில் 5 மாத குழந்தைகூட "சதைப்பிரியர்"களுக்கு மங்கையாகவே காட்சி தருவாள். எனவே, பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகள் 10 வயதை கடந்துவிட்டாலே உலக நடப்புகளையும், ஊரில் நடக்கும் அபாய செய்திகளையும் புரிய வைக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டு செயல்பட்டால் பல சிக்கல்களையும், துயரங்களையும் தவிர்க்க முடியும்.