கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?! தொலைந்த வாழ்க்கையை தேடி அலையும் ஷீலா!
Recommended Video

ஈரோடு: வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டு பின்னர் ஒன்றாக வாழாமல் உரிய காலம் வரும்வரை அவரவர் வீட்டில் தம்பதியாக வாழும் கலாச்சாரம் தமிழகத்திற்கு ஒன்றும் புதிது இல்லை. ஜெமினிகணேசன்-சாவித்ரியும்கூட நடைமுறையிலேயே அப்படியேதான் சிறிது காலம் வாழ்ந்து வந்தனர். ஆனால் "அலைபாயுதே" படத்திலிருந்துதான் இளசுகளிடையே அந்த முறை பிரபலமானது.
நிர்ப்பந்தம் காரணமாக இப்படியும் கல்யாணம் செய்துகொண்டு, பின்னர் காலமோ, நேரமோ, சூழ்நிலையோ பண்பட்ட பிறகு ஒன்றாக இணைந்து வாழலாம் என்ற சிஸ்டம் ஆங்காங்கே நடைபெற துவங்கியது. அது சில நேரங்களில் தம்பதிகளுக்கு சாதகமாகவே அமைந்தது. காரணம், இருவரும் மேஜர்கள் என்பதாலும் முறைப்படி திருமணத்தை பதிவு செய்வதாலும், ஆனால், முறையாக இல்லாமல் செய்யப்படும் திருமணங்கள் கண்ணீரையே பதிலாக தரும். அப்படித்தான் ஈரோடு மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

தாலி கட்டிக்கொண்டார்
அரச்சலூர் சகாயபுரத்தை சேர்ந்த பெண் ஷீலா. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஷீலா, தான் கல்லூரியில் படிக்கும் போதே, கவின்குமார் என்பவரை உயிருக்கு உயிராக விரும்பினார். அவரும் ஷீலாவை நேசித்தார். இருவரும் 7 வருடங்கள் மனப்பூர்வமாக காதலித்தனர். கவின்குமார் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் முத்தூர் பெருமாள் கோயில் புதூரை சேர்ந்தவராம்.கடந்த 2017 ஏப்ரல் 10-ம் தேதியன்று ஷீலாவும், கவின்குமாரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். கவின்குமாரின் குலதெய்வ கோயிலில்தான் மாலை மாற்றிக் கொண்டு, தாலி கட்டிக் கொண்டனர்.

தாழ்த்தப்பட்ட சமூகம்
பின்னர் அவரவர் வீட்டில் தனித்தனியாக வாழ தொடங்கினர். எவ்வளவுதான் பொத்தி பொத்தி விஷயம் வெளியே தெரியாமல் மறைத்தாலும் கடைசியில் வெளி வராமல் இருக்குமா என்ன? முதலில் கவின்குமாரின் பெற்றோருக்குத்தான் ரகசிய திருமணம் நடந்த சங்கதி தெரியவந்தது. கேள்விப்பட்டதும் வீட்டில் ரணகளம்தான். இந்த திருமணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை. அதற்கு முக்கிய காரணம், ஷீலா தாழ்த்தப்பட்ட
சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுதான்.

உதவியை நாடிய ஷீலா
அதனால் கவின்குமாரை பலமுறை கண்டிக்க தொடங்கினர். அதோடு விட்டார்களா, ஷீலாவை கூப்பிட்டு, "என் பையனுடன் பேசாதே, சேராதே, மீறினால் கொன்றுவிடுவோம்" என மிரட்டலும் விடுக்க தொடங்கினர். இதற்கெல்லாம் சளைக்காத ஷீலா நேராக தனது ஊரில் உள்ள அருந்ததியர் மக்கள் இயக்கத்தினரிடம் உதவியை நாடினார். அந்த இயக்கத்தின் முக்கிய பிரதிநிதிகளை கூட்டிக்கொண்டு, ஈரோடு எஸ்.பி. சக்திகணேஷிடம் வந்து நடந்த அனைத்தையும் சொன்னார். "என்னை எனது கணவர்கவின்குமாருடன் சேர்த்து வையுங்கள். அவரை உரிய பாதுகாப்பையும் வழங்குங்கள், என்று கேட்டு புகார் மனுவையும் தந்துள்ளார்.

மன்றாடும் ஷீலா
இதில் உச்சக்கட்ட சோகம் என்னவென்றால், கவின்குமார் தற்போது ஷீலாவை வெறுத்து ஒதுக்குகிறாராம். பேச்சுவார்த்தையே இல்லையாம். அவரது பெற்றோர் அவரின் மனதை மாற்றிவிட்டதாக ஷீலா கண்ணீர் வடிக்கிறார். ஷீலாவின் கண்ணீருக்கு மற்றொரு காரணம், கவின்குமாருடன் ஏற்பட்ட தொடர்பால் 3 முறை கருக்கலைப்பு நடந்துள்ளது. இப்போது ஷீலாவை யாரென்றே தெரியாது என்று சொல்கிறாராம் கவின்குமார். தன் பெண்மையை தொலைத்துவிட்டு, ஊர் பெரியவர்களுடன் போலீசாரிடம் தனது வாழ்க்கைக்காக மன்றாடி கொண்டிருக்கிறார் ஷீலா.

அறிவுப்பூர்வமாக சிந்தியுங்கள்
படித்த சில பெண்களே இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடலாமா? திருமணத்தை பதிவு கூடசெய்யாமல் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டு தாலி கட்டிக் கொண்டால் அது ஏற்றுக் கொள்ளப்படுமா? வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்வது முக்கியம் இல்லை. ஆனால் அந்த திருமணத்தை முறைப்படுத்துவதும், சட்டமாக்குவதும் அவசியம். இல்லையென்றால் இதுபோன்ற தோல்வியில்தான் பெரும்பாலும் திருமணங்கள் முடியும். சோகத்தில்தான் நிறைவடையும். காலசக்கரத்தில் சுழல வைக்கும். எனவே இந்த கால பெண்கள், ஒருவனை நம்பி தாலியை ஏற்றுக்கொள்வதற்குமுன், உணர்வுபூர்வமாக இல்லாமல் அறிவுப்பூர்வமாக யோசித்து முடிவெடுப்பதே புத்திசாலித்தனம்.












Click it and Unblock the Notifications