சென்னையில் போலீசார் அடித்ததால் தீக்குளித்த வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டன் மரணம்
சென்னையில் போலீசார் அடித்ததால் தீக்குளித்த வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Recommended Video

சென்னை: போலீசார் அடித்ததால் மனமுடைந்து தீக்குளித்த வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 22 வயதான இந்த இளைஞர் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு ட்ராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 24 ஆம் தேதி சென்னை ஓஎம்ஆர் சாலையில் மணிகண்டன் காரை ஓட்டிச் சென்றார். அப்போது எஸ்ஆர்பி டூல்ஸ் என்ற இடத்தில் மணிகண்டனின் காரை போலீசார் வழிமறித்தனர்.

தீக்குளித்த இளைஞர்
சீட் பெல்ட் அணியவில்லை எனக்கூறி அவரை போலீஸார் 4 பேர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சரமாரியாக தாக்கினர். பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்டதால் மனமுடைந்த அந்த இளைஞர் காரில் இருந்த பெட்ரோலை எடுத்து போலீசார் முன்னிலையிலேயே தீக்குளித்தார்.

மருத்துவமனையில் அனுமதி
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைத்து இளைஞரை மீட்டனர். உடல்கருகிய நிலையில் படுகாயமடைந்த அந்த இளைஞர் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இளைஞர் மரணம்
59 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி மணிகண்டன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகொலை செய்த போலீஸ்
சீட் பெல்ட் அணியாததை காரணமாக வைத்து காவல்துறையினர் நடத்திய அடாவடியால் இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயது இளைஞரை அவமானப்படுத்தி காவல்துறையினர் படுகொலை செய்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் பாதிப்பு
தமிழகத்தில் அண்மைக்காலமாக சாலைவிதிகளை மீறுவோர் போலீசார் தாக்கி உயிரிழப்பதும் காயமடைவதும் அதிகரித்து வருகிறது. சோதனை என்ற பெயரில் அத்துமீறும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications