சங்கரன்கோவிலில் ஆடி தபசு - குவியும் பக்தர்கள்
சங்கரன்கோவிலில் ஆடி தபசு நிகழ்வுக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர்.
நெல்லை: சங்கரன்கோவிலில் இன்று ஆடி தபசு நடப்பதால் அங்கு பக்தர்கள் பல்வேறு பகுதியிலிருந்து குவிய தொடங்கியுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழகத்தில் வரலாற்று சிறப்பு பெற்ற சிவ ஆலயங்களில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலும் ஒன்றாகும். அரியும், அரனும் ஒன்று என்ற தத்துவத்தை கோமதி அம்மனுக்கு ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் காட்சி அளித்தது ஆடி தபசாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகம் முழுக்க பிரசித்திபெற்றது.
இந்தாண்டு ஆடி தபசு திருவிழா ஜூலை 27ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தபசு திருவிழா இன்று கோலாகலமாக நடக்கிறது.
தொடர்ந்து தவக் கோவலத்தில் கோமதி அம்பாள் சப்பரத்தில் உலாவாக தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு செல்கிறார். மாலை 4 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நாராயண சாமி ஆடி தபசு பந்தலை அடைந்து அம்பாளுக்கு சங்கர நாராயணராக காட்சி தருகிறார்.
தொடர்ந்து இரவு 11 மணி அளவில் கோயிலில் இருந்து சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி இரவு 12 மணிக்கு தெற்கு ரத வீதியில் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் இரண்டாவது தபசு காட்சி நடக்கிறது. இந்த விழாவை காண மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிய தொடங்கியுள்ளனர்.
ஆடிதபசு திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருவதால், காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்களும், நகர எல்லையில் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்ட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.