தமிழக அரசு துறையின் ஊழல்கள் பட்டியல்... ஜனவரி1முதல் ரிலீஸ்: எச்சரிக்கும் ஆம் ஆத்மி கட்சி
சேலம்: டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சி, தமிழகத்தில் அரசுதுறையில் நடைபெறும் ஊழல்கள் பட்டியலை ஜனவரி 1ம் தேதி முதல் வெளியிட உள்ளதாக எச்சரித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சேலத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழல் செய்துள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டிவருகின்றனர். ஆளுநரிடம் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஊழல் பட்டியலை அளித்துள்ளன. பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை என பல துறைகளில் அதிகாரிகளின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியினரும் இப்போது தமிழக அரசின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த வசீகரன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் சென்றடையவில்லை என்று குற்றம் சாட்டினார்.

வெள்ள நிவாரண நிதி
வெள்ள நிவாரண விஷயத்தில் தமிழக அரசு தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று கூறிய வசீகரன், நிவாரண உதவி வழங்குவது முறைப்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் நிவாரண நிதி
முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நிதிகள் குறித்து வெளிப்படை தன்மை இல்லாததால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிவாரண நிதி அரசிடம் தரவில்லை என்றும் மாறாக நேரடியாக மக்களிடையே சென்று நிவாரண நிதி மற்றும் பொருள்களை அளித்து வருகின்றனர் என்றும் என்றும் வசீகரன் கூறினார்.
ஊழலில் முதலிடம்
இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழலில் முதல் மாநிலமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில்துறை வாரியாக நடந்த ஊழல் பட்டியலை ஜனவரி 1ம் தேதி முதல் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.
அரசியல் முதிர்ச்சியில்லை
விஜயகாந்த் செய்தியாளர்களிடம் அநாகரிகமாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், அவர் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசுவதாக குற்றம் சாட்டினார்.
அரசியலில் மாற்றம்
தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்றும் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்தார். வரும் சட்டசபை தேர்தலில் மக்களோடு கூட்டணி வைக்கப்போவதாகவும் வசீகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications