சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா டிச.9-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதனையொட்டி நடராஜர் கோயிலில் சித்ரசபை எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராயர் சுவாமியை முன்னிறுத்தி திங்கள்கிழமை காலை 9.50 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் தில்லைநாகபூஷண தீட்சிதர் பசுக்கொடியை ஏற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசித்தனர். பின்னர் பஞ்சமூர்த்தி தங்கம், வெள்ளி மஞ்சங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

தேர்த்திருவிழா
விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேர்த் திருவிழா டிச.17-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு டிசம்பர்.18-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

திருவெம்பாவை உற்சவம்
பின்னர் காலை 10 மணிக்கு சித்ரசபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
19-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவம் நடைபெறும் 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்ரசபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

திருவாதிரை நட்சத்திரம்
ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருவாதிரைக் களி
திருவாதிரைக்கு ஒருவாய்க்களி' என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது. திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசித்து வருவது சிறப்பு என்கின்றன புராணங்கள்.

மரகதநடராஜர்
ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிப்பார். ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறுவது சிறப்பம்சம்.












Click it and Unblock the Notifications