ஆவின் பால் கலப்பட வழக்கு.. மோசடி மன்னன்: வைத்தியநாதனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்!
சென்னை: ஆவின் பால் கலப்பட வழக்கில் கைதான வைத்தியநாதனுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆவின் பாலை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை திண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தில் நிறுத்தி சிலர் அந்த பாலை திருடி அதில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் விரைந்து சென்று பாலில் கலப்படம் செய்ததாக 9 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான சென்னையை சேர்ந்த அரசியல் பிரமுகர் வைத்தியநாதன், பால்கோவா கம்பெனி உரிமையாளர்கள் சுதாகரன், சந்திரசேகரன் உள்பட மேலும் 10 பேரை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வைத்தியநாதன் மனைவி மற்றும் ஆவின் பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி உள்பட 2 பேர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர். கடந்த நவம்பர் 18ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே வைத்தியநாதனை தவிர மற்ற 18 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். வைத்தியநாதனுக்கு ஜாமீன் கிடைக்காததால் கடந்த 145 நாட்களுக்கும் மேலாக கடலூர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைதாகி உள்ள வைத்தியநாதன் பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் தள்ளுபடி செய்தன.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வைத்தியநாதன் மனு தாக்கல் செய்தார். இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.