அப்துல் கலாம் பிறந்த நாள்... காரைக்குடி பள்ளியில் இளைஞர் எழுச்சிநாள் விழா
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இந்தியா முழுவதும் இன்று அப்துல் கலாமின் 84வது பிறந்த நாள் விழா மக்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் இளைஞர் எழுச்சி நாளாக இது கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்தநாள் விழா "இளைஞர் எழுச்சிநாள் விழாவாக" 15.10.2015 அன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழா காரைக்குடி நகர்மன்றத்தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நகர்மன்றத் தலைவர் "அப்துல் கலாம் அறிவியல் மன்றத்தை பள்ளியில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர். அங்கப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் மீனா மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் ஆறுமுகம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், அழகு சுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.
விழா நிகழ்வுகள் அனைத்தையும் மாணவர்களே தொகுத்து வழங்கினர். விழாவில் மாணவர்கள், அப்துல் கலாம் அவர்களின் சிறப்புகள் பற்றி, கவிதையாகவும், பாடலாகவும், வில்லுப்பாட்டு மூலமாகவும் வெளிப்படுத்தினர்.
பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவின் போது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி செய்திருந்தார். விழாவின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.