மணப்பாறை அருகே விபத்தில் 3 பேர் பலி– 17க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மணப்பாறை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வேலூர் கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் மணப்பாறை பக்கம் உள்ள மேட்டுக்கடையை அடுத்த அனந்தனூருக்கு புறப்பட்டு வந்தனர்.
அனந்தனூரில் உறவினர் ஒருவர் இறந்து போனதை துக்கம் விசாரிப்பதற்காக புறப்பட்டு சென்றனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. சித்தப்பட்டி என்ற இடத்தில் வந்த போது ரோடு ஓரத்தில் உள்ள பள்ளத்தில் திடீரென வேன் கவிழ்ந்தது.
வேனில் பயணம் செய்த அழகம்மாள் , பெருமாயி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 17க்கும் மேற்பட்டவர்களை அந்த பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் வரும் வழியிலேயே தைலம்மை பரிதாபமாக இறந்து போனார். பிச்சையம்மாள், பாப்பாத்தி, கனகு உள்பட மற்றவர்கள் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்து பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர்கள் உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து நடந்ததற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகிறார்கள். துக்கம் விசாரிக்க சென்ற போது விபத்தில் சிக்கி பலியான சம்பவம் துக்க வீட்டை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.