பேஸ்புக்கில் பழகிய பெண்ணை வீட்டில் சிறைவைத்த நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது!
பேஸ்புக்கில் பழகிய பெண்ணை வீட்டில் சிறைவைத்ததாக நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசனை போலீசார் கைது செய்துள்ளனர். பேஸ்புக்கில் பழகிய பெண்ணை, வீட்டுக்கு வரவழைத்து கட்டாயப்படுத்தி, மிரட்டி அடைத்து வைத்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை புவனேஸ்வரி, பல சர்ச்சைகளில் ஏற்கனவே சிக்கியுள்ளார். பேஸ்புக்கில் பழகிய பெண்ணை வீட்டில் அடைத்து வைத்ததாக தற்போது அவருடைய மகன் மிதுன் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த, 32 வயதாகும் உதயா என்ற பெண், விவாகரத்து பெற்று, 10 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர் பேஸ்புக்கில் மிதுன் சீனிசனுடன் பழகி உள்ளார். உதயாவை திருமணம் செய்ய விரும்புவதாக மிதுன் கூறியுள்ளார். இதனிடையே மிதுன் போதைப்பழக்கம் உள்ளவர் என்பது தெரிய வந்ததால் திருமணம் செய்யும் முடிவை உதயா மாற்றிக் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மிதுன் அவரை மிரட்டியுள்ளார். இருவருக்கும் இடையே இது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனிடையில், உதயாவை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி மிதுன் அழைத்துள்ளார். அதன்படி மகனுடன் உதயா சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உதயா மற்றும் அவருடைய மகனை, வீட்டின் ஒரு அறையில் மிதுன் அடைத்து வைத்துள்ளார். போதையில் அவர் தூங்கியபோது, நடிகை புவனேஸ்வரி, அறைக்கதவை திறந்து விட்டு, உதயாவை அனுப்பி வைத்துள்ளார். உதயா கொடுத்த புகாரின் அடிப்படையில் மிதுன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர்.
ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை புவனேஸ்வரிக்கு, தற்போது இது மிகப் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.