அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக நடிகர் தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்
உயர்நீதீமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜராகியுள்ளார். மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜராகியுள்ளார். சான்றிதழ்கள் படி அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷின் கல்விச் சான்றிதழ்களை தனுஷ் தரப்பிலும், அவரை மகனாக உரிமை கோரும் கதிரேசன் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தனுஷின் பத்தாவது வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் இந்த வழக்கில் எதிர்மனுதாரரான கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டியுள்ளது என்றார்.
எனவே 28ஆம் தேதியான இன்று நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக ஆஜராக வேண்டும் என நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் தனுஷ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.












Click it and Unblock the Notifications