ரஜினி, விஜய், அஜித் இணைந்தால் தமிழக அரசியலை மாற்ற முடியும்: எஸ்.வி.சேகர் பலே ஐடியா
சென்னை: ரஜினி, விஜய், அஜித் இணைந்து தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: அரசாங்க பணத்தை/மக்கள் பணத்தை திருட வேண்டிய இடத்தில் ரஜினி இல்லை. எனவே அவர் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?
சிலர் நான் சினிமா இயக்குநர் என்கிறார்கள், ஆனால் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என ஊளையிடுகிறார்கள். அவர்கள் கட்சிக்கு பணம் எங்கேயிருந்து வந்தது. அதையெல்லாம் சொல்ல வேண்டும்.

எதையும் கேட்பீர்களா?
நதிநீர் இணைப்புக்கு ரஜினி ஏன் 1 கோடி கொடுக்கவில்லை என கேட்கிறார்கள். ரஜினி கூறியது, நதிநீர் இணைப்பை ஆரம்பித்தால் முதல் பணம் என்னுடையது என்பதுதான். முழு பணத்தையும் போட்டு செய்ய அவர் அரசாங்கம் இல்லையே. என்ன வேண்டுமானாலும் ஒருவர் கேட்கலாமா?

அய்யாகண்ணு பணம் தருவாரா
அய்யாக்கண்ணு ரஜினியிடம் போய் அவரிடம் நதிநீர் இணைப்புக்கு பணம் கேட்கிறார். ரஜினி 1 கோடி கொடுத்தால் மற்ற பணத்தையெல்லாம் அய்யாக்கண்ணு போட்டு நதிநீரை இணைப்பாரா? ரஜினியை பார்க்கனும், கூட சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு போய்விட்டு எதையாவது சொல்வதா?

கிங்கா, கிங்மேக்கரா
ரஜினி அரசியலுக்கு வருவார், ஆனால் அவர் கிங்காக வருவாரா அல்லது கிங் மேக்கராக வருவாரா என்பது நமக்கு தெரியாது. ரஜினியே வருகிறார் என வைத்துக்கொள்வோம். விஜயை கூப்பிட்டு பேசலாம். அஜித்தை பார்த்து பேசலாம். நாம் இணைந்து மூவரும் சேர்ந்து அரசியலில் செயல்படலாம் என அவர் அழைக்கலாம்.

மூவரும் இணைந்து
நான் வழிகாட்டுகிறேன், எனக்கு பிறகு நீங்கள் பாருங்கள், அல்லது மூவருமே சேர்ந்து அரசியலில் ஈடுபடலாம் என்று ரஜினி அவர்களை கேட்டுக்கொள்ளலாம். ஏன் நல்லாட்சி கொடுக்க முடியாதா? சினிமா நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூற நீங்கள் யார்? சொந்த உழைப்பினால் சம்பாதித்த பணத்து அரசியல் நடத்த வருபவர்களை பார்த்து கேள்வி கேட்க மற்றவர்களுக்கு என்ன உரிமையுள்ளது? இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications