நாடு முழுக்க இவர்தான் டிரெண்ட்.. ரஜினி, கமலுக்கு பிறகு தேசிய ஹீரோவாக உயர்ந்த விஜய்!
சென்னை: தேசிய அளவில் நடிகர் விஜய் பெயர் பிரபலமாகியுள்ளதன் மூலம், ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் மற்றொரு ஹீரோ முகமாக அறியப்பட ஆரம்பித்துள்ளார் அவர்.
ரஜினி, கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய நால்வரும்தான் தமிழ் சினிமா என்ற வட இந்தியர்கள் நினைப்பில் இப்போது புது முகம் ஒன்று ஒட்டிக்கொண்டுள்ளது. அது, பக்கா திராவிட சாயல் கொண்ட விஜய் முகம்.
இதற்காக விஜயும், அவர் ரசிகர்களும், தமிழர்களும் நன்றி சொல்ல வேண்டியது, தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்குத்தான்.

விஜய் புகழ்
மெர்சல் விவகாரம்தான் நேற்று முதல் தேசிய மீடியாக்களின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. தேசிய அளவில் மெர்சல் vs மோடி என்று டிரெண்ட் செய்யப்பட்டது. இதனால் விஜய் முகம் தேசிய ஊடகங்களில் திரும்ப திரும்ப காட்டப்பட்டது. யார் இந்த ஹீரோ என பல கோடி வட இந்தியர்கள் விஜயை உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர்.

விஜய்க்கு பெருமை
வேறு எந்த ஒரு தென் இந்திய மொழி ஹீரோவுக்கும் சமீப காலங்களில் கிடைக்காத அட்டென்ஷன் விஜய்க்கு கிடைத்துள்ளது. மத சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த ஷாரூக்கான், பிகே திரைப்படத்திற்காக அமீர்கான் போன்ற, பாலிவுட் பாட்ஷாக்கள்தான் இதுவரை தேசிய ஊடகங்களின் பேசு பொருள்களாக இருந்துள்ளனர். அதிமுக அரசு மீதான விமர்சனம், அரசியல் பிரவேச பேச்சு ஆகியவற்றால் கமல் சமீபத்தில் கவனம் ஈர்த்தார். ஆனால் திரைப்பட வசனம் ஒன்றுக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், ராஜஸ்தான் முதல் மேகாலயா வரையில் தேச மக்கள் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றால் அது விஜய் நடித்த மெர்சல்தான்.

வீட்டுக்கு வீடு வசனம்
தமிழிசை அன்டு கோ புண்ணியத்தால், தமிழக திரையரங்குகளில் மட்டுமே எதிரொலித்த ஜிஎஸ்டி வசனம் இப்போது இந்திய மக்கள் ஒவ்வொருவர் வீட்டு வரவேற்பு அறைகளிலும் ஒலித்துக்கொண்டுள்ளது. விஜய் சிறப்பான நடிப்பை அந்த காட்சியில் வழங்கியிருப்பார். இது அவரது நடிப்பு திறமையையும் ஒருசேர மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிட்டது.

இளம் ஹீரோக்களில் பெருமை
கன்னடத்தில் ஒரு புனித் ராஜ்குமாருக்கோ, மலையாளத்தில் நிவின் பாலிக்கோ, தெலுங்கில் பவன் கல்யாணுக்கோ கிடைக்காத 'தேசிய ஹீரோ' அந்தஸ்தை தமிழின் விஜய்க்கு பெற்றுக்கொடுத்த பாஜக தமிழக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக கடமைப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு பாஜக செய்த ஒரே நன்மை இது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

புரமோஷன் பெற்ற விஜய்
இளைய தளபதி, தளபதி என்று ப்ரமோட் செய்யப்பட்ட நல்ல நேரமோ என்னவோ, மாநில ஹீரோவாக அல்லது குறைந்தபட்சம் தென் மாநில ஹீரோவாாக இருந்த விஜய் இப்போது தேசிய ஹீரோவாக ப்ரமோட் ஆகிவிட்டார். ரஹ்மான் இசையில் வெளியான ஆளப்போறான் தமிழன் பாடலும், வேட்டியின் பெருமைக்காக வைக்கப்பட்ட காட்சிகளும் கூட இப்போது தேசமெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ பாஜக தமிழ் பாரம்பரியத்தை வட இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்துவிட்டது.












Click it and Unblock the Notifications