"விஷால் ஒன்றும் பெரிய ஆள் இல்லை..அழைத்துப் பேச"- மல்லுகட்டும் ராதாரவி
மதுரை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகர் விஷாலை அழைத்துப்பேசும் அளவிற்கு அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல் ஜூலை 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரை நாடக நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த நடிகர் ராதாரவி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியபோது...
நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி நிச்சயம் வெற்றி பெறும். நடிகர் சங்கத்தில் சிலர் பிரச்னைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எந்தவொரு பிரச்னைகளையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். விஷால் பேசி வருவதை பார்த்தால் அவர் சொந்தமாக பேசுவதுபோல் தெரியவில்லை, யாரோ தூண்டிவிட்டு அவரை பேச வைப்பதாக தெரிகிறது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, விஷாலை அழைத்துப் பேசும் அளவிற்கு அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை.
இந்த சங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் எதிராக செயல்பட்டு வருகிறார்கள். தவறுகளை சுட்டிக் காட்டினால் நாங்கள் திருத்திக் கொள்கிறோம். சங்கத்தில் ஊழல் முறைகேடு என்கிறார்கள். ஆனால் அதையும் தெளிவாக சொல்வதில்லை. அதைவிட்டு விட்டு, நடிகர் விஷால் கோபப்படுகிறார். அவர் தனி நபர்தான். நடிகர் சங்கத்தில் முக்கிய முடிவு எடுக்க பொதுக்குழுவிற்கு தான் அதிகாரம் உள்ளது. எனவே தனி நபர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.
நடிகர் சங்கம் அரசியலை சார்ந்தது இல்லை. தற்போது நடந்து வருவதை பார்த்தால், சில சமயங்களில் அரசியல் சாயம் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. நடிகர் சங்கத்துக்கு பொறுத்தமான தலைவர் சரத்குமார்தான்.
சட்டசபை தேர்தலில் எனக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை. அ.தி.மு.க. பிரசாரத்திற்கு அழைத்தால் செல்வேன்.
இவ்வாறு நடிகர் ராதாரவி கூறினார்.