கார்த்தியைப் பாரு.. என்னா கலரு... ஓட்டுப் போட வந்த நடிகர், நடிகையரை ரசித்த பொதுமக்கள்!!!
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் நடிகையர் ஓட்டுப் போட குவிந்தார்கள் என்றால் அவர்களைப் பார்த்து ரசிக்க பொதுமக்களும் பெருமளவில் குவிந்து விட்டனர். அதே போல மீடியாக்களும் பெருமளவில் குவி்ந்து செய்தி சேகரித்து வருகின்றன.
சென்னை மயிலாப்பூர் செயின்ட் எபாஸ் பள்ளியில் வாக்குப் பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
நடப்புத் தலைவர் சரத்குமார் அணி சார்பில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு அவர் மீண்டும் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
எதிர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், பொருளாளர் பதவிக்கு கார்த்தி போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர இரு அணி சார்பிலும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 48 பேர் போட்டியிடுகின்றனர். நடிகர் சங்க தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நடத்துகிறார்.
தேர்தலில் மொத்தம் 3,139 பேர் ஓட்டு போட தகுதியுள்ளவர்கள். இவர்களில் 1,175 பேர் சென்னைக்கு வெளியில் வசிக்கும் நாடக நடிகர், நடிகைகள். சென்னையில் நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இணை ஆணையர் மற்றும் 2 துணை ஆணையர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு அளிக்கும் இடத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னைக்கு வாக்களிக்க வெளியூரில் இருந்து 1175 பேர் வந்துள்ளனர். ஓட்டுப் போட கூடியவர்களில் 982 பேர் நடிகர்கள், நாடக நடிகர்கள் 957, துணை நடிகர்கள் 1200 பேர்.
தேர்தலையொட்டி காலையிலிருந்தே நடிகர் நடிகையர் வாக்களித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயக்குமார், ராதாரவி உள்ளிட்டோர் காலையிலேயே வாக்களித்து விட்டனர். நடிகைகள் அம்பிகா, ராதா உள்ளிட்டோரும் வந்து வாக்களித்தனர்.
நடிகர் நடிகையர் வருவதை வேடிக்கை பார்க்க பொதுமக்களும் வந்த வண்ணம் உள்ளனர். மீடியாக்களும் குவி்ந்துள்ளன. கார்த்தியைப் பாரு என்னா கலரு, சரத்குமாரைப் பாரு என்னா கலரு என்று "ஜொள்ளு" விட்டு ரசித்ததையும் பார்க்க முடிந்தது.