நமக்கு தெரியாமல் அவர் எப்படி அங்கு சென்றார்... தமிழக பாஜகவில் நடைபெறும் விவாதம்
சென்னை: குடியரசு தினத்தன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நடத்திய தேநீர் விருந்தில் நடிகை கவுதமி கலந்துகொண்ட விவகாரம் தமிழக பாஜகவில் பெரும்விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இருக்கும் கவுதமிக்கு யார் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது, அவரது டெல்லி தொடர்புகள் யார் என்பது பற்றியெல்லாம் சில ஆராய்ச்சிகள் நடக்கிறதாம்.
குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த அளித்த தேநீர் விருந்துக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் துறைகளின் செயலாளர்கள் என மிக முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கவுதமியும் பங்கேற்றது கவனிக்கத்தக்கது.

ஜெயலலிதா அபிமானி
நடிகை கவுதமியை பொறுத்தவரை மறைந்த ஜெயலலிதா மீது தீராத பற்றுக்கொண்டவர். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அதிமுக அபிமானியாக தன்னை வெளிக்காட்டி கொள்ளாவிட்டாலும் அவரது நடவடிக்கைகள், செயல்பாடுகள் என அனைத்தும் அதிமுக ஆதரவு நிலைப்பாடுடையதாக இருக்கும். ஜெயலலிதா மறைந்த பின்னர் திடீரென ஒருநாள் பிரதமர் மோடியை சந்தித்த கவுதமி, அதன் பின்னர் தன்னை பாஜக ஆதரவாளராக வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக புகாரை எழுப்பினார்.

கட்சி நிகழ்ச்சிகள்
பாஜக உறுப்பினராக சேர்ந்த கவுதமி அதன் பின்னர் பெரியளவில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சென்றதை அடுத்து, தமிழக பாஜக நிர்வாகத்தில் இரு வெற்றிடம் ஏற்பட்டது. இதையடுத்து வானதி சீனிவாசனுடன் இணைந்து தமிழக பாஜக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கினார். கமலாலயத்திற்கு அடிக்கடி வருகை தரத்தொடங்கிய கவுதமி, உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு விநியோகத்தை தொடங்கி வைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார். பின்னர் கொங்கு மண்டலத்தில் மட்டும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை கூட மேற்கொண்டார்.

வி.ஐ.பி.பாஸ்
இப்படி படிப்படியாக பாஜகவில் செல்வாக்கை வளர்த்து வரும் நடிகை கவுதமி அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற டீ பார்ட்டியிலும் கலந்துகொண்டார். இந்த விவகாரம் தான் தமிழக பாஜக நிர்வாகிகள் சிலருக்கு வியப்பை அளித்துள்ளது. கவுதமி தனி ரூட்டில் பயணம் செய்வது நல்லதல்ல என்றும், அவருக்கு டெல்லியில் உள்ள தொடர்புகள் என்னவென்றும் இங்குள்ள சில நிர்வாகிகள் விவாதம் நடத்தினார்களாம். இதனிடையே தமிழகத்தை சேர்ந்த பெண் மத்திய அமைச்சர் ஒருவரின் ஆசி நடிகை கவுதமிக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

செய்தித்தொடர்பாளர்
இதனிடையே பாஜகவில் செய்தித்தொடர்பாளர் பதவி பெற கவுதமி முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்ட பின்பு நடிகை கவுதமிக்கு பாஜகவில் செய்தித் தொடர்பாளர் பதவி தரப்படுமாம். காங்கிரஸில் குஷ்பூ தேசிய செய்தித் தொடர்பாளராக உள்ளது போல் பாஜகவில் கவுதமியும் தேசிய செய்திதொடர்பாளராக விரைவில் பொறுப்பு பெறுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications