சிங்கம் போல் ‘சிங்கிளா’ வந்து ஜெயலலிதா ஜெயிப்பார்: நடிகை விந்தியா பஞ்ச்
திருநெல்வேலி: 6 பேர் இல்லை 100 பேர் வந்தாலும் அ.தி.மு.க வை அசைக்க முடியாது... சிங்கம் போல சிங்கிளாக வந்து ஜெயலலிதா ஜெயிப்பார் என்று நடிகை விந்தியா நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் விந்தியாவின் பேச்சில் அனல் பறக்கிறது. திமுக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி என அனைவரையும் பிரச்சாரத்தில் திட்டி பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்.
நெல்லையில் திமுக இல்லை என்பதை இந்த தேர்தல் நிருபிக்கும். கருணாநிதி கட்சியில் ஆட்கள் இல்லாததால், மற்ற கட்சிகளை உடைத்து ஆள் சேர்க்கிறார் என்று கூறினார்.
அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என்று இருப்பதில் அம்மா பெயரை எடுத்துவிட்டு அண்ணா பெயரை போடுவாராம். தி.மு.க வையே பேசாம அண்ணா தி.மு.க. என்று மாற்றிவிட வேண்டியது தானே என்று கேட்ட போது கூட்டத்தில் விசில் பறந்தது.
6 பேர் கூட்டணியாக வந்துள்ளார்களாம். 6 பேர் இல்லை 100 பேர் வந்தாலும் அ.தி.மு.க வை அசைக்க முடியாது. ஒரு திருமண மண்டபத்தை இடித்ததற்காக ஆரம்பித்த கட்சி அல்ல அதிமுக கொள்கைக்காக கேள்வி கேட்டு தொடங்கப்பட்டு வந்த கட்சி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், " கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்களா தான் வரும்" என்று சொன்னார். அதுபோல ஜெயலலிதா சிங்கம், சிங்களாக வந்து மகத்தான வெற்றி பெறுவார்.
ஜெயலலிதா மக்களை ஏமாற்றவில்லை. மலிவு விலை மதுவை ஒழிப்பேன் என்றார். ஒழித்தார். லாட்டரியை ஒழிப்பேன் என்றார், ஒழித்தார். அழகிரி ஆட்டத்தை அடக்குவேன் என்றார் அடக்கினார். முல்லை பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்துவேன், காவிரி பிரச்சனையில் தீர்வு காண்பேன் என்றார், செய்து காட்டினார். 2016ல் படிப்படியாக மதுக்கடையை ஒழிப்பேன் என்கிறார், நிச்சயம் செய்து காட்டுவார்.
ஜெயலலிதாவை மேலே பார்த்து கும்பிடுகிறார்களாம். குப்பை தொட்டி கீழே இருக்கும், எச்சியை துப்புவார்கள், கோபுரம் மேலே இருக்கும், கும்பிடுவார்கள்.
திமுக தேர்தல் அறிக்கை
தி.மு.க. தேர்தல் அறிக்கையை படிக்க வேண்டாம், பார்த்தாலே சிரிப்பு வருகிறது. எதைஎதையோ திருடுவார்கள். ஆனால் அதில் திட்டத்தையே திருடுகிறார்கள். மது ஒழிப்புக்கு முதல் கையெழுத்து என்றார். இப்போது சட்டம் கொண்டு வந்து ஒழிப்போம் என்கிறார். ஜல்லிக்கட்டுக்கு புது சட்டம் கொண்டு வருவார்களாம். ஜல்லிக்கட்டுக்கு தடைகொண்டுவந்ததே தி.மு.க காங்கிரஸ் கூட்டணிதானே!
முட்டி தேய்ந்த மாப்பிள்ளை
கழுதை தேய்ந்து கட்டெரும்பானது போல காங்கிரஸ் தேய்ந்து கிடக்கிறது. அதற்கு 41 தொகுதிகள். இப்போது வேட்பாளர்களை தேடுகிறார்கள். முட்டி தேய்ந்த மாப்பிள்ளைக்கு ஒத்த பெண்ணை கொடுத்தா என்ன? 10 பெண்ணை கொடுத்தா என்ன? காங்கிரஸை அவஸ்தைப்பட வைக்கத்தான் இது உதவும்.
குஷ்பு இட்லி வேகாது
ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வரை எதிர்த்து குஷ்பு போட்டி என்றார். அந்த இட்லி அங்கு வேகாது என்று பின்வாங்கிவிட்டார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதியை குஷ்பு வசை பாடினார். இப்போது ஓட்டு கேட்கிறார். சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறும் இளங்கோவன் சுதந்திரமாக நடமாடவும், சத்திய மூர்த்தி பவன் பாதுகாப்பாக உள்ளதையும் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.
நடக்கவே முடியாது
விஜயகாந்த் பற்றி பேசவேண்டும் என்றாலே சிரிப்பு வந்து விடுகிறது. "மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்று தலைவர் பாடினார். விஜயகாந்தால் நேராக நடக்கவே முடியாது. குண்டடிப்பட்டு குரல் மாறிபோன எம்.ஜி.ஆரையும் குடித்து குரல் மாறிபோன விஜயகாந்த்தையும் ஒப்பிடக்கூடாது.
காமெடி கூட்டணி
லோக்சபா தேர்தலில் டெபாசிட் வாங்காத கட்சி, " வேஸ்ட் பீஸ்" கூட்டணி அமைத்துள்ளது. ஜி.கே.வாசன் விஜயகாந்தை மூப்பனாராக பார்க்கிறாராம். வடிவேலு கட்டப்பொம்மன் வேசம் போடமுடியுமா? விஜயகாந்தை முதல்வர் என்றும், வைகோ துணை முதல்வர் என்றும், கூட்டணி தலைவர்களை மந்திரி என்று கூறியும் காமெடி செய்கிறார்கள் என்று பேசிவிட்டு போனார் விந்தியா.