ஆதி யோகி சிலை அமைந்துள்ள இடம் ஆன்மீக தலமாக மாறும்.. மோடி
சிவன் சிலை அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் மிகப் பெரிய ஆன்மீக தலமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சென்னை: 112 அடி சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, அவர் சிவன் சிலை திறக்கப்பட்டுள்ள இந்த இடம் மிகப் பெரிய ஆன்மீக தலமாக மாறும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மோடி மேலும் பேசியதாவது:
யோகா தற்போது பல வகைகளில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. யோகா மிகவும் பழமையான ஒன்று. அதே வேளையில், புதுமையானதாகவும் யோகா திகழ்கிறது. அதே போன்று யோகா நிரந்தரமானது. ஆனால் தற்போதுதான் அது வளர்ந்து வருகிறது. யோகாவின் மிகப் பெரிய அழகே இதில்தான் இருக்கிறது.
யோகா போன்ற கலையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஜீவ நிலையிலிருந்து சிவன் நிலைக்கு உயர்த்துவதே யோகம். யோகா பயில்வதன் மூலம் மனம், உடல், புத்தி அனைத்தும் மேம்படும். என்னுள் என்பதில் இருந்து நம்மில் என விரிவடையும் பெயர் யோகா.
சிவன் என்றதும் அவர் குடியிருக்கும் இமயமலை நினைவுக்கு வருகிறது போல், பார்வதி என்றதும் கன்னியாகுமரிதான் நினைவுக்கு வருகிறது. மலையும், சமுத்திரமும் இணையும் அற்புதம் இந்தியாவில் நடக்கிறது. பாம்பும், எலியும் ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் சிவனிடம் பாம்பும், விநாயகரிடம் எலியும் உள்ளது. கார்த்திகேயனிடம் மயில் வாகனம் உள்ளது. இப்படி சிவ குடும்பம் நமக்கு வேற்றுமையில் ஒற்றுமை தத்துவத்தை விளக்குகிறது என்று மோடி பேசினார்.