ஜெ.வை ஆபாசமாக பேசுவதா... சேலத்திற்குள் நுழைய பிரேமலதாவுக்குத் தடை விதிக்க அதிமுக கோரிக்கை
சேலம்: முதல்வர் ஜெயலலிதாவை ஆபாசமாகப் பேசியதால் சேலம் மாவட்டத்திற்குள் நுழைய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் மாவட்ட ஆட்சியரின் மனு அளித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரும், அதிமுக வழக்கறிஞருமான ஏ.பி.மணிகண்டன், நேற்று அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தேமுதிக சார்பில் சேலம் மாவட்டம், மேச்சேரியில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் நோக்கோடு, தமிழக முதல்வரை மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசியுள்ளார்.
அவருக்கு முன்னர் மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், தமிழக முதல்வரையும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய குடும்பம் குறித்துப் பேசினார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.
எனவே, சமூக அமைதியை, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் நோக்கத்தோடு பேசி வரும் பிரேமலதா விஜயகாந்தை சேலம் மாவட்டத்தில் நுழையத் தடை விதிக்க வேண்டும். மேட்டூர் சட்டசபை உறுப்பினர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications