கூட்டணிக் கட்சிகளுக்கு 7 சீட் மட்டுமே... 'இரட்டை இலை'யை ஏற்று தமாகா வந்தால் அதிமுக சீட் குறையும்?
சென்னை: அதிமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளி அள்ளித் தருவார்கள என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிள்ளிக் கிள்ளி வெறும் 7 தொகுதிகளை மட்டுமே ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, செ.கு.தமிழரசன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கருணாஸின் புலிப் படை, ஷேக் தாவூத் ஆகியோருக்கு மட்டுமே சீட் கிடைத்துள்ளது. இவர்கள் அனைவருமே இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட உள்ளனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி வேல்முருகனுக்கு சீட் தரப்படவில்லை. மற்றும் சரத்குமாரை முறைத்துக் கொண்டு தனிக் கட்சி கண்ட எர்ணாவூர் நாராயணன் ஆகியோருக்கும் சீிட் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இதயத்தில் மட்டும் ஜெயலலிதா இடம் கொடுத்து விட்டதாக தெரிகிறது.
அதிமுக கூட்டணியில், மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு நாகை, ஒட்டன் சத்திரம் ஆகிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கொங்கு இளைஞர் பேரவையின். உ. தனியரசுக்கு காங்கேயம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் செ.கு தமிழரசன் போட்டியிடுகிறார்.
கடந்த முறை தென்காசியில் வென்ற சரத்குமாருக்கு இந்த முறை திருச்செந்தூர் கிடைத்துள்ளது.
ஷேக் தாவூத் கடையநல்லூரில் போட்டியிடப் போகிறார்.
நடிகர் கருணாஸ் அதிமுக கூட்டணியில் புதுமுகம். அவருக்கும் சீட் கொடுத்துள்ளார் திருவாடானை தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளார்.
தமாகா வந்தால்..?
அதே நேரத்தில் அதிமுக தரும் குறைந்தபட்ச சீட்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சொன்னதை வாசன் ஏற்காததால் கூட்டணியில் இடம் தரப்படவில்லை என்று தெரிகிறது. ஒருவேளை சீட் எண்ணிக்கையில் ஜெயலலிதா தருவதை ஏற்றாலும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க முன்வந்தால் மட்டுமே வாசனுக்கு கூட்டணியில் இடம் தரப்படும் என்று தெரிகிறது.
அவ்வாறு ஒரு வேளை வந்தால அதிமுகவின் தொகுதிகள் பட்டியலில் அதற்கேற்ப சீட் குறையும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications