கபடதாரி கருணாநிதி... கோமாளி விஜயகாந்த்... போட்டுத்தாக்கும் அனிதா குப்புசாமி
திருச்சி: கருணாநிதி, விஜயகாந்த், ஸ்டாலின் என அரசியல் தலைவர்களை வசைபாடிய அனிதா குப்புசாமி, குஷ்புவையும் விட்டுவைக்காமல் போட்டு தாக்கியுள்ளார். அ.தி.மு.க-வின் 44-ம் ஆண்டு தொடக்க விழாவில் சாதனைகளை பேசுவதை விட வசைபாடுவதையே முக்கிய கொள்கையாக கொண்டிருக்கின்றனர் அதிமுக பேச்சாளர்கள்.
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைமைக் கழக பேச்சாளர் அனிதா குப்புசாமி, எதிர்கட்சித்தலைவர்களைப்பற்றி குறை கூறி பேசினார் என்பதை விட பாட்டாகவே பாடினார். அவர் பேசியதில் பல கருத்துக்களை பிரசுரிக்க முடியாவிட்டாலும், ஹைலைட்டாக சில விசயங்களை கொடுத்திருக்கிறோம் படிங்களேன்.
கபடதாரி கருணாநிதி
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்தபோது கடனில் கோபாலபுரம் வீடு மூழ்கப்போவதாக கருணாநிதி நாடகமாடினார். உடனே கருணாநிதிக்காக உதவி செய்ய 'எங்கள் தங்கம்' படத்தில் ஒரு பைசா கூட வாங்காமல் தலைவரும், அம்மா ஜெயலலிதாவும் நடித்தாங்க. அப்படிப்பட்ட உயர்ந்த மனிதர் நமது தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் அடுத்த மாதம் முரசொலி கட்டடம் கட்டப்பட்டது. அப்போதுதான் தலைவருக்கு கருணாநிதியின் கபட நாடகம் தெரிய ஆரம்பித்தது. அதன் பிறகு பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி தலைவரை கட்சியில் இருந்து நீக்கினார்.
அதிமுக உதயம்
17.10.1972-ல் உதயமானதுதான் நம் கட்சி. அப்போது தி.மு.கவை அழிக்க வேண்டும் என தலைவர் நினைத்துதான் அ.தி.மு.கவை உருவாக்கினார். ஆனால் அவரால் முடியவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசி. அதனால்தான் புரட்சி தலைவி அம்மாவை அடையாளம் காட்டினார். அம்மா, தி.மு.கவை அடையாளம் இல்லாமல் செய்துகொண்டிருக்கிறார்.
நதிநீர் பிரச்சினை
நான் கேட்கிறேன்... கருணாநிதிக்கு தேசிய அளவில் செல்வாக்கு இருந்த காலத்தில் எல்லா துறைகளையும் தனது பிள்ளைகளுக்காக போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கியவர், ஏன் நீர்வளத் துறையை வாங்கவில்லை. அப்படி வாங்கினால் காவிரி கிடையாது என சொல்ல வேண்டியிருக்கும். அதனால் கர்நாடகாவில் நடக்கும் தொழில்கள் பாதிக்கும் என்பதுதான் உண்மை. ஆனால் அம்மா தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகளை தீர்க்க இரும்பு கரம் கொண்டு செயல்படுபவர்.
கோமாளி விஜயகாந்த்
இதுக்கு நடுவுல சில நாட்களுக்கு முன் பிரேமலதா விஜயகாந்த், 2016 தேர்தலில் ஜெயலலிதாவை முதல்வராக விடமாட்டேன்னு சொல்லி காமெடி பண்ணியிருக்கிறார். சமீபகாலமாக காமெடி காட்சிகள் இல்லை. காரணம் விஜயகாந்த் உளறுவதுதான் ஹிட் அடித்து இருக்கிறது. பொதுக்கூட்டங்களில் பிரேமலதா, விஜயகாந்தைப்போலவே உளறிக்கொட்டுகிறார். யார் இந்த பிரேமலதா? விஜயகாந்தின் மனைவி என்பதைத் தவிர வேறென்ன தகுதியிருக்கிறது இவருக்கு?
நடிக்கும் ஸ்டாலின்
திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைக்காத ஸ்டாலினின் மகன் சபரீசன், தனது மாமனாரை வைத்து தமிழகம் முழுவதும் ஷூட்டிங் நடத்தி படம் எடுக்கிறார். 'மாமா கையை தூக்குங்க, சிரிங்க' என சபரீசன் சொல்லும்படிதான் ஸ்டாலின் நடக்கிறார். ஸ்டாலினின் இளம் வயதில் அவங்க மனைவி துர்கா நடிக்க விடல. அதனால வெள்ளை வேஷ்டி, சட்டை போட்டுகிட்டு இருந்தவர், இப்போ தனது நிறைவேறாத ஆசைகளைத் தீர்த்துக்கிறார். அப்பா கருணாநிதி நடத்தும் நாடகத்தை மிஞ்சும் அளவுக்கு ஸ்டாலின் பயணத்தில் பயங்கரமாக வேஷம் போட்டு நாடகம் போடுகிறார்.
அன்புமணி
கடந்த வருடங்களில் 5 முறை ஆட்சி உங்கள் கையில் இருந்தது. ஏன் மதுவிலக்கை அமல்படுத்தல. எல்லாம் நாடகம். அதேபோல ஒபாமா ரேஞ்சிக்கு அன்புமணி ராமதாஸ் போஸ்டர் ஒட்டி வருகிறார். முதல் கையெழுத்து மதுவிலக்குக்குதான் என சொல்கிறார். ஆட்சியைப் பிடித்தால்தான் மதுவிலக்கு பற்றி யோசிக்கணுமா. பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் குடிக்கக் கூடாதுன்னு உத்தரவு போடுங்க பார்ப்போம். வெறும் நாற்காலி மட்டும்தான் இருக்கும்.
வைகோ
வைகோவை பற்றி சொல்லணும். இந்த வைகோவுக்கு வாழ்க்கை கொடுத்தது அம்மாதான். விஜயகாந்துக்கு 29 எம்.எல்.ஏ-க்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதிலும் அவரின் கோமாளித்தனம் தாங்காமல் பலபேர் போயிட்டாங்க. அ.தி.மு.க-வோடு கூட்டணியில்லை என்றால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் காணாமல் போயிருப்பார். எதிர்க்கட்சி தலைவர் பதவி அம்மா போட்ட பிச்சை.
காங்கிரஸ் குஷ்பு
காந்தி, நேரு உள்ளிட்டோர் வளர்த்த காங்கிரஸ் இப்போ குஷ்பு கையில் சிக்கி சின்னாபின்னமாகிறது. ஒரு கட்சி துவங்கப்பட்டால் அது தேய்ந்துபோகும் என்பது வரலாறு. ஆனால் அ.தி.மு.க. துவங்கி திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டது முதல், இன்றுவரை 44 ஆண்டுகள் ஆகியுள்ளது. மக்கள் செல்வாக்கோடு ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்குக் காரணம் புரட்சி தலைவி அம்மாதான்" என்று மூச்சு விடாமல் பேசி முடித்தார் அனிதா குப்புச்சாமி.