18 முறை கட்சிக்காக சிறை சென்றும் சீட் இல்லையா... எம்.ஜி.ஆர் சமாதி முன்பு தர்ணா!
சென்னை: சென்னை எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக விசுவாசி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர் மன்ற திருவள்ளுர் மாவட்டத் துணைத் தலைவர் பூவை முத்து என்பவரின் மகன் தியாகராஜன். இவர் இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக கொடி மற்றும் தான் அதிமுகவில் இருந்ததற்கான புகைப்படங்களை வைத்துக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்துக் கேட்டபோது, கடந்த 20 வருடங்களாக தனது தந்தை கட்சிப்பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், 18 முறைக்கு மேல் கட்சிக்காக சிறை சென்றுள்ளதாகவும், தானும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இந்த தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து, தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்க தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆவடி தொகுதியில் முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ. பாண்டியராஜன் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேமுதிகவில் இருந்து வெளியேறியவர்களில் பாண்டியராஜனுக்கு மட்டும்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications