கார் மீது ரூ. 8 லட்சத்தில் "அம்மா" சிலையை சுமந்தபடி வலம் வரும் ''பிஸ்கட்'' பாபு
சென்னை: நகைக்கடை விளம்பரம் போல கழுத்து, கைகள், காதுகளில் ஜெயலலிதாவின் படம் போட்ட நகைகளை அணிந்து கொண்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் அதிமுகவினர் ஒருவகை என்றால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் மீது முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கல சிலையை வைத்து அனைவரையும் கவர்ந்து வருகிறார் ஒரு தொண்டர். அவரது பெயர் பிஸ்கட் பாபுவாம்.
காரில் ஜெயலலிதா சிலை. கவனத்தை ஈர்க்கும் தொண்டர் :) pic.twitter.com/Jngn7VO3qy
— Sriram (@SriramMADRAS) February 8, 2016
இவரது பாபு என்ற பெயருடன் பிஸ்கட் எப்படி ஒட்டிக் கொண்டது என்றால் இவரது தந்தை பேக்கரி கடை வைத்துள்ளாராம். அதனால் இவரது பெயருடன் பிஸ்கட்டையும் கோர்த்து விட்டாராம்.
தற்போது கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் பிஸ்கட் பாபுவின் குடும்பமே தீவிர அதிமுகவினராம். ஜெயலலிதாவின் 63வது பிறந்தநாளிற்காக 630 கிலோ கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறாராம்.
வெள்ளை நிற வோல்ஸ்வேகன் காரை 8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ள பிஸ்கட் பாபு முதல்வரின் படத்தை வரைந்துள்ளார். பின்னால், 'நடமாடும் உலக அதிசயமே' என்ற வார்த்தைகளோடு 234 என்ற எண்ணையும் வரைந்துள்ளார். இவற்றை எல்லாம் விட கார் மீது ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை வைத்துள்ளார்.
சென்னை நகருக்கும் வலம் வரும் இந்த காரை சற்றே ஆச்சரியமாகத்தான் பார்க்கின்றனர். வேலூர் அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு பணம் கட்டியுள்ளாராம் பிஸ்கட் பாபு. இது மூன்றாவது முறை என்பதால் கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். இந்த காருடன் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார் பிஸ்கட் பாபு.
இந்த மாதிரி தீவிர தொண்டர்கள் இருப்பதால்தான் அதிமுகவை நூறு ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது என்று கூறி வருகிறார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications