ஜெ.வுக்கு ஜாமீன் மறுப்பு: சென்னையில் கடைகள் திடீர் அடைப்பு.. மீண்டும் பீதியில் மக்கள்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்து விட்டதால் சென்னையிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது தமிழகம் முழுவதும் பெரும் வன்முறை வெடித்தது. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஒட்டுமொத்த தமிழகமும் வெறிச்சோடிப் போனது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது கர்நாடக உயர்நீதிமன்றம். இதனால் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.
அதிமுகவினர் மாநிலம் முழுவதிலும் போராட்டங்களில் குதித்துள்ளனர். முதலில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததாக வெளியான செய்தியால் அவர்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். ஆனால் சிறிது நேரத்திலேயே அது ஏமாற்றத்தில் போய் முடிந்தது. இதனால் விரக்தியிலும், கோபத்திலும் அவர்கள் மீண்டும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடிய அ.தி.மு.க.வினரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஆனால், ஜாமீன் மறுப்பு தகவலை கேட்டு விரக்தி அடைந்த அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் பல இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்ததால் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது.
தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியமங்கலத்தில் அ.தி.மு.க.வினர் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல பழனியில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த மகிழ்ச்சியை முதலில் கொண்டாடிக் கொண்டிருந்த அதிமுகவினர், பின்னர் அது தவறான செய்தி என்று தெரிய வந்து சோகமடைந்தனர். அப்போது கர்நாடக பதிவெண்ணுடன் அந்த சாலை வழியாக சென்ற வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினர். இதில் வேனின் கண்ணாடி உடைந்தது.