3 தொகுதிகளிலும் அதிமுக ஆதிக்கம்.. குத்தாட்டம் போட்டு மகளிரணி கொண்டாட்டம்
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இதை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக ஆதிக்கம் செலுத்தியதால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் 3 தொகுதிகளிலுமே ஆரம்பம் முதல் அதிமுக முன்னிலை வகித்து வந்தது.

மதியம் 1.30 மணி நிலவரப்படி, தஞ்சையில் அதிமுக அதிகாரப்பூர்வமாக வெற்றியை பெற்றுவிட்டது. அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அக்கட்சி முன்னிலை வகித்தது.

வாக்கு எண்ணிக்கை நாளான இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி இருந்தனர். ரிசல்டுகளை அறிந்தததும் பெரும் மகிழ்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள், பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அதிமுகவின் மகளிர் குத்தாட்டம் போட்டு அதிமுகவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நல்ல செயல்களுக்காகவே இந்த வெற்றியை மக்கள் அளித்திருப்பதாகவும், அவர்தான் தொடர்ந்து வெற்றி பெறுவார் என்றும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications