'மணி.. மணி.. மணி...'.. நெருங்கும் சட்டசபைத் தேர்தல்.. வசூலை வாரிக் குவிக்கும் அதிமுக!
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது... எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் நிதிகளை வசூலிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. நிதிகளை அள்ளிக்கொடுங்கள் என்று திமுக பகிரங்கமாகவே கேட்டுவருகிறது. ஆனால் ஆளும் அதிமுகவோ உட்கட்சி தேர்தல் மூலம், விண்ணப்ப கட்டணமாக, கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல், 14 கட்டங்களாக நடைபெறும் என, கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள, ஒன்றியங்களுக்குட்பட்ட கிளை நிர்வாகிகள், ஊராட்சி செயலர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள், மாநகராட்சி பகுதிக்குட்பட்ட, வட்ட நிர்வாகிகள் தேர்தல், ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்டது.
அதன்பின், ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல், ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்டது. கிளை மற்றும் வட்ட நிர்வாகிகள் தேர்தலில், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தாங்கள் விரும்பியவர்களை, பதவிக்கு கொண்டு வந்ததாகவும், பணம் கொடுத்தவர்களுக்கு, பதவி வழங்கப்பட்டதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது.

உட்கட்சி தேர்தலுக்கு மனு
இதனையடுத்து நகரம், ஒன்றியம் மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்தலில், விரும்பியவர்கள் மனு கொடுக்க, ஏற்பாடு செய்யும்படியும், அதில் ஒருவரை, போட்டியின்றி தேர்வு செய்யும்படியும், கட்சி தலைமை உத்தரவிட்டது. அதன்படி, நகரச் செயலர், ஒன்றிய செயலர் பதவிக்கு போட்டியிடுவோர், விண்ணப்ப கட்டணமாக, 5,000 ரூபாயும், மற்றவர்கள், 2,000 ரூபாயும் செலுத்த வேண்டும் என, கட்சி மேலிடம் உத்தரவிட்டது.

வசூலாகும் தொகை
ஒவ்வொரு ஒன்றியம் மற்றும் நகரத்தில், தலா, 10 பதவிகள் உள்ளன. ஒவ்வொரு பதவிக்கும், ஐந்துக்கும் மேற்பட்டோர் மனு செய்ததால், பெரும் தொகை வசூலானது. அடுத்த இரண்டு கட்டமாக, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்டச் செயலர் பதவிக்கு, 25 ஆயிரம் ரூபாய், மற்ற பதவிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டி போட்டு
இப்பதவிகளுக்கும், விரும்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் விண்ணப்பித்தாலும், கட்சி தலைமை தேர்வு செய்யும் நபரே, தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது. எனினும், கட்சி தலைமையின் கவனத்தை கவர வேண்டும் என்பதற்காக, ஏராளமானோர் பணம் கட்டி வருகின்றனர்.

தேர்தல் செலவுக்கு
இப்படிப் கட்டப்படும் பணம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சிரமமின்றி வசூலாகி உள்ளதாம். இந்த பணத்தை சட்டசபை தேர்தலுக்கு செலவழிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நிதி என்ற பெயரில், தி.மு.க., பண வசூலில் ஈடுபட்டுள்ள நிலையில், அ.தி.மு.க., தலைமை உட்கட்சி தேர்தலை பயன்படுத்தி, அசால்டாக கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து விட்டனர் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications