கூட்டணி கட்சிக்கு தொகுதியை மாற்றிய ஜெ: ஒட்டன்சத்திரத்தில் அதிமுக- ம.நே.ஜ. கட்சிக்கு வேலூர்!!
சென்னை: வேட்பாளர்களை அதிரடியாக மாற்றி வரும் அதிமுக தற்போது தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுடன் மாற்றி வருகிறது. மனிதநேய ஜனநாய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் இதற்கு பதிலாக அக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக 227 இடங்களிலும் கூட்டணிக் கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சியான தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒட்டன்சத்திரம் மற்றும் நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
ஒட்டன்சத்திரத்தில் அதிமுக
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் அதற்கு பதிலாக அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட வேலூர் தொகுதி மனித நேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கிட்டுசாமி
மேலும் ஒட்டன்சத்திரத்தில் அதிமுக வேட்பாளராக கே.கிட்டுசாமி போட்டியிடுவார் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி மனிதநேய ஜனநாய கட்சியானது நாகை மற்றும் வேலூர் தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
சக்கரபாணியை வீழ்த்த...
ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 4 முறை தொடர்ந்து திமுகவின் அர. சக்கரபாணியே வெற்றி பெற்று வருகிறார். 1980களில் அதிமுகவின் கோட்டையாக இருந்த ஒட்டன்சத்திரத்தில் திமுகவின் சக்கரபாணி அசைக்க முடியாத சக்தியாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறார்.
அங்கு மனித நேய ஜனநாயகக் கட்சி நின்றால் நிச்சயம் சக்கரபாணி எளிதாக வென்றுவிடுவார் என்பதால் அதிமுக போட்டியிடும் சூழலில் கடுமையான போட்டியை உருவாக்க முடியும் எனவும் வியூகம் வகுத்து இந்த மாற்றத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
6 தொகுதிகளில்...
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை ஆகிய 6 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது அதிமுக. வேடசந்தூர் தொகுதியில் மட்டும் காங்கிரஸுடன் மோதுகிறது அதிமுக.