ஒதுங்கிப் போகும் விஜயகாந்த்... துரத்தி துரத்தி ‘கலாய்க்கும்’ அதிமுக!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபைக்கு வராவிட்டாலும் கூட விடாமல் அவரை சட்டசபையில் ஆளுங்கட்சியினர் விமர்சித்து வருவதால் தேமுதிகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
விஜயகாந்த்துக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் நிலையில் அவரை இப்படியா நாகரீகமின்றி விமர்சிப்பது என்ற ஆதங்கமும் எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. விஜயகாந்த்தோ, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலைதான் அவர் சென்னைக்குத் திரும்பினார்.

தொடர்ந்து விமர்சனம்
ஆனால் சட்டசபைக் கூட்டத்தில் தொடர்ந்து விஜயகாந்த்தை விமர்சித்துப் பேசாத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு தினசரி யாராவது ஒருவர் விஜயகாந்த்தை விமர்சித்துப் பேசி வருகின்றனர்.

கூட்டத்துக்கு வருவதைத் தவிர்க்கும் விஜயகாந்த்
முன்பு முதல்வர் ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் வாதம் புரிந்து, அதனால் கோபமாகி நாக்கைத் துருத்தி திட்டி, பெரும் பிரச்சினை ஏற்பட்டதற்குப் பின்னர் சட்டசபைக்கு வருவதையே தவிர்த்து வருகிறார் விஜயகாந்த்.

கையெழுத்துடன் சரி
சட்டசபைக்கு அவ்வப்போது வந்து லாபியில் கையெழுத்து மட்டும் போட்டு விட்டு போய் விடுகிறார் விஜயகாந்த்.

உடல் நிலை சரியில்லை
இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பே விஜயகாந்த்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சமீபத்தில் கூட அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த்துடன் சிகிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார் விஜயகாந்த்.

அப்படியும் விடாத அதிமுக
விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லை, சிகிச்சைக்காகப் போயிருக்கிறார் என்ற போதிலும் சட்டசபையில் அவரை ஆளுங்கட்சியினர் விடுவதாக இல்லை.

சந்தி சிரிக்கும்
சமீபத்தில் கூட முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பான விவாதத்தின்போது அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறுகையில், முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக விஜயகாந்த் போராட்டம் நடத்தியதாக கூறினால், சந்தி சிரிக்கும் என்று விமர்சித்தார்.

தேமுதிகவினர் விரக்தி
சட்டசபையில் ஆளே இல்லாத நிலையில் தொடர்ந்து விஜயகாந்த்தை ஆளுங்கட்சியினர் விமர்சிப்பது நியாயமா என்று தேமுதிகவினர் விரக்தியுடன் கேட்கிறார்கள்.












Click it and Unblock the Notifications