உள்ளாட்சி தேர்தல்.. 'சீட்' கிடைக்காததால் அதிமுக பெண் கவுன்சிலர் தர்ணா
திண்டுக்கல்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிமுக கவுன்சில் திடீரென திண்டுக்கல்லில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 19ம் தேதி இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 1வது வார்டு மாமன்ற அதிமுக உறுப்பினராக இருப்பவர் முத்துலட்சுமி. இவர் 1வது வார்டில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தற்போது கவுன்சிலாராக பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் ஜெயராமும் 1வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 முறை கணவர் மனைவி வெற்றி பெற்றதால், 1வது வார்டில் மீண்டும் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் முத்துலட்சுமிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக சுதா என்ற பெண்ணுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனால் அதிமுகவில் சீட் தராததை கண்டித்து தனது ஆதரவாளர்களோடு முத்துலட்சுமி 1வது வார்டு பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது மேயர் மருதராஜ்தான் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார். ஆனால் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் அவரது மகள், மகன், தம்பி மருமகள் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 1வது வார்டில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் தனக்கு சீட் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் சுயேட்சையாக போட்டியிட வேண்டிய நிலை வரும் என முத்துலெட்சுமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications